யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஏமன் நாட்டு மீனவர்கள் தத்தளிக்கும் ஆடுகளை கடலிலிருந்து மீட்கும் வகையிலே அந்த ஆடுகளை தங்கள் சிறிய படகுகளின் மூலமாக கரைக்கு எடுத்து வந்திருக்கிறார்கள்.
பரவிய செய்தி
ஆஸ்திரேலியாவிலிருந்து சவூதிக்கு ஆடுகளை ஏற்றி சென்ற கப்பல் ஏமேன் அருகே கடலில் மூழ்கியதால் கடலில் தத்தளித்த ஆடுகளை அள்ளி சென்ற ஏமேன் மக்கள்.

விரிவான விளக்கம்
ஒரு நிமிட நீளமுள்ள வீடியோவில், ‘கடலில் கவிழ்ந்து கிடக்கும் கப்பலைச் சுற்றி ஆடுகள் மிதந்து கொண்டிருக்கின்றன. சிறிய படகுகளில் வந்த ஆட்களை கடலில் தத்தளிக்கும் ஆடுகளை படகுகளில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள்’. இந்த வீடியோவை பதிவிட்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து சவூதிக்கு ஆடுகளை ஏற்றி சென்ற கப்பல் ஏமன் அருகே கடலில் மூழ்கியதால் கடலில் தத்தளித்த ஆடுகளை ஏமன் மக்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக எடுத்துச் செல்கிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிலிருந்து
சவூதிக்கு ஆடுகளை ஏற்றி சென்ற கப்பல்
ஏமேன் அருகே கடலில் மூழ்கியதால்
கடலில் தத்தளித்த ஆடுகளை அள்ளி சென்ற ஏமேன் மக்கள் 😂😂😂@polimernews @TamilJanamNews @tvjanam @DDNewslive @DDTamilNews @PttvNewsX pic.twitter.com/tkZkRxT8vg
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’The Indian EXPRESS’ செய்தித்தளத்தில் இதுகுறித்த செய்தியைக் காணமுடிந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான அந்த செய்தியில், ‘ஆடுகளை ஏற்றிக்கொண்டு ஆப்ரிக்காவில் உள்ள ’ஜிபூட்டி’ என்ற துறைமுக நகரத்திற்கு சென்று கொண்டிருந்த கப்பல் செங்கடலில் மூழ்கியதாகவும், அதில் 160க்கும் மேற்பட்ட ஆடுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமிருக்கும் ஆடுகள் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் ஏமன் நாட்டைச் சேர்ந்த உள்ளூர் மீன்வர்கள் தங்களது படகுகளில் சென்று கடலில் மிதந்துகொண்டிருக்கும் ஆடுகளை மீட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேடியதில், ’ALJAZEERA’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியின் படி, ”ஏமன் நாட்டின் லாஜ் என்ற மாகாணத்தில் உள்ள ’ராஸ் அல்-அரா’ என்ற கடற்கரைக்கு அருகில் இந்த கப்பல் கவிழ்ந்தது எனவும், நூற்றுக்கணக்கான ஆடுகளை அங்கிருந்த ஏமன் மக்கள் மீட்டனர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து, ஏமன் நாட்டு மீனவர்கள் கடலில் தத்தளித்த ஆடுகளை மீட்கவே அவைகளை படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. மேலும், இந்த கப்பல் சவூதிக்கு செல்லவில்லை, ஆப்ரிக்காவில் உள்ள ’ஜிபூட்டி’ என்ற துறைமுக நகரத்திற்கு தான் சென்றுகொண்டிருந்தது என்பதும் தெரியவருகிறது.
முடிவு:
செங்கடலில் மூழ்கிய கப்பலிருந்து தத்தளிக்கும் ஆடுகளை ஏமன் நாட்டு மீனவர்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக எடுத்துச் சென்றதாக தவறாக பரப்பப்படுகிறது. ஏமன் மீனவர்கள் அந்த ஆடுகளை கடலிலிருந்து மீட்கும் வகையிலே தங்கள் சிறிய படகுகளின் மூலமாக கரைக்கு எடுத்து வந்தார்கள்.