யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அவர் “எங்க அப்பா என்ன பாடு படுவார் பசும்பொன்னில், முதல் மரியாதை எப்படி என்று தெரியவில்லை, பசும்பொன்னில் நான் தான் எழுத்தாளர்” என்ற அர்த்தத்திலேயே பேசியிருப்பார். இதனை, முதல்மரியாதை படத்தில் நான் தான் எழுத்தாளர் என்று சீமான் கூறியதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
நான் எழுதியதால் தான் முதல் மரியாதை படம் வெற்றி பெற்றது. நான்தான் அந்த படத்தின் எழுத்தாளர். முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்தது. இயக்குநர் பாரதிராஜா. திரை கதை பாரதிராஜா!! உதவி இயக்குநர்கள் யாரும் இல்ல. அந்த படத்தின் கதை , வசனம், எழுத்தாளர் செல்வராஜ்.
விரிவான விளக்கம்
இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்மரியாதை படத்திற்கு “நான் தான் எழுத்தாளர்” என்று கூறியுள்ளதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த படத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று சிவாஜிக்கு சொல்லிகொடுத்தது மட்டும் அல்ல பாரதிராஜாவுக்கும் டைரக்ஷனில் பல டெக்னிக் சொல்லி கொடுத்தது நீதான் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் 😂😂
“நான் எழுதியதால் தான் முதல் மரியாதை படம் வெற்றி பெற்றது”
நான்தான் அந்த படத்தின்… pic.twitter.com/gmz0TJdQZo
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்த போது, “Tamil Star” பக்கத்தில் இதன் முழு வீடியோ கிடைத்தது. பரமசிவன் ஃபாத்திமா என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ள சீமான், ““எங்க அப்பா என்ன பாடு படுவார் பசும்பொன்னில், முதல் மரியாதை எப்படி என்று தெரியவில்லை, நான் தான் அதற்கு எழுத்தாளர்“ என்று கூறியுள்ளார்.
இதில் அவர் “எங்க அப்பா என்ன பாடு படுவார் பசும்பொன்னில், முதல் மரியாதை எப்படி என்று தெரியவில்லை, பசும்பொன்னில் நான் தான் எழுத்தாளர்” என்ற அர்த்தத்திலேயே பேசியிருப்பார். இதனை, முதல்மரியாதை படத்தில் நான் தான் எழுத்தாளர் என்று சீமான் கூறியதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் பசும்பொன் திரைப்படத்தில் சீமான் தான் எழுத்தாளரா என்பது குறித்தும் ஆய்வு செய்தோம். திரைப்படத்தில், சரியாக 4:04 நிமிடத்தில், கதை வசனம் சீமான் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், சீமான் கூறியது போல பசும்பொன் திரைப்படத்தில் அவர் தான் எழுயத்தாளர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், முதல்மரியாதை படத்தில் நான் தான் எழுத்தாளர் என்று சீமான் கூறியதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.