
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஆகையால், இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்த அச்சங்கள் சமூக வலைதளங்களில் உருவாகி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கையில்...
பரவிய செய்தி

விரிவான விளக்கம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கையில், கொரோனா வைரஸின் அறிகுறிகள், வைரஸ் தாக்குதலில் இருந்து தடுக்கும் வழிமுறைகள் , உணவு முறைகள், மார்ச் 2020 வரைக்கும் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் மற்றும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என பல விவரங்களை வெளியிட்டு உள்ளதாக வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தரப்பில் அவ்வாறான எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியாகவில்லை. கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து அறிந்த உடன் சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளை சோதனை செய்து வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என அறிய மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சுகாதார வழங்குநர்களுக்குகொரோனா வைரசை சமாளிக்க வழிகாட்டுதல்கள் அளித்து உள்ளனர்.
Novel #coronavirus outbreak in #China: Travel Advisory to travelers visiting China.@PMOIndia @drharshvardhan @AshwiniKChoubey @PIB_India @NITIAayog @MoCA_GoI @MEAIndia pic.twitter.com/YE8PdmtaDl
— Ministry of Health (@MoHFW_INDIA) January 17, 2020
ஜனவரி 17-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அயல்நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு வைரஸ் சோதனை செய்தல் குறித்த அறிவுரையை வெளியிட்டு இருந்தது. அதன்பின்னர், மரணங்கள் அதிகரித்த பிறகு கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய குடிமக்கள் தொடர்பு கொள்ள 011-23978046 என்ற சேவை எண்ணையும் அமைச்சகம் வழங்கி உள்ளது.
Some preventive measures against Novel #coronavirus :#ncov2020#HealthForAll@PMOIndia @drharshvardhan @AshwiniKChoubey @PIB_India @DDNewslive @airnewsalerts pic.twitter.com/4TvVOB3P12
— Ministry of Health (@MoHFW_INDIA) January 28, 2020
Twitter link | archived link
ஜனவரி 28-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு உலக சுகாதார மையத்தால் வெளியிடப்பட்ட தடுப்புமுறைகளை பதிவிட்டு இருந்தனர்.
கொரோனா வைரஸ் புதிதாக காற்றின் மூலமும் பரவி வருவதால் மாஸ்க் அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆகையால், வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் முகத்தில் மற்றும் உடல் முழுவதும் மூடி இருக்கும்படி மாஸ்க், பாதுகாப்பு உடைகள் அணிந்து கொள்கிறர்கள்.
மேலும் படிக்க : அச்சுறுத்தலை உண்டாக்கிய சீனாவின் கொரோனா வைரஸ் !
தொண்டையை ஈரப்பதத்துடன் வைத்திருக்குமாறு எந்த ஆராய்ச்சியாளரும், எந்த நாட்டின் சுகாதார மையமும் அறிவுறுத்தவில்லை. ஃபார்வர்டு செய்தியில் குறிப்பிட்டது போன்று, காரசாரமான உணவு மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றிற்கும், இந்தியாவில் இருக்கும் உணவிற்கும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கும் தொடர்பில்லை. கொரோனா வைரஸின் தொடக்கம் எங்கிருந்து வந்தது என தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை.
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதால் இந்தியாவில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வேண்டுமே தவிர, தவறான தகவல்களை பரப்பி அல்ல. இதுபோன்ற நிலைகளில் தவறான தகவல்களால் பயனேதுமில்லை. வாட்ஸ் அப் ஃபார்வர்டு செய்திகளை நம்பி பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.