யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
துல்லியமான விவரங்களை மறைத்துவிட்டு உண்மைத் தகவல்களை திரித்து பரப்புகிறார் பாஜகவின் தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார்.
பரவிய செய்தி
நான்காண்டுகால திமுக ஆட்சியில் மின்சாரத்துறையின் சாதனைகள்.
புதிய மின் உற்பத்தி திட்டங்கள் : 0,
வருடாவருடம் தொடர்ந்து நான்கு முறை கட்டண உயர்வை அமல்படுத்தி இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் மாநிலமாக தமிழகத்தை மாற்றியது,
தனியார் சோலார் மின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மெகாவாட்டிற்கு ₹25.0 லட்சம் வரை லஞ்சம்,
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்வதில் தனியார் நிறுவனங்களிடம் செட்டிங் செய்து பதினேழு நிறுவனங்களுக்கு சந்தை மதிப்பை விட 50% கூடுதல் விலையில் டென்டர்,
பரதமரின் வீட்டிற்கான சோலார் மின் திட்டங்களை அமல்படுத்துவதில் மெத்தன போக்கு.


விரிவான விளக்கம்
கடந்த 2021ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை புதிய மின்சார உற்பத்தி திட்டம் எதையும் கொண்டு வரவில்லை என்றும், நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதாகவும், மேலும் அட்டவணை ஒன்றின் புகைப்படத்தை பதிவிட்டு இந்திய மாநிலங்களிலே தமிழ்நாட்டில் தான் ஒரு யூனிட்கான மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்.
நான்காண்டுகால திமுக ஆட்சியில் மின்சாரத்துறையின் சாதனைகள்.
🔆 புதிய மின் உற்பத்தி திட்டங்கள் : 0
🔆 வருடாவருடம் தொடர்ந்து நான்கு முறை கட்டண உயர்வை அமல்படுத்தி இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் மாநிலமாக தமிழகத்தை மாற்றியது
🔆 தனியார் சோலார் மின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க… pic.twitter.com/YctyDS1KKW
உண்மை என்ன?
திமுகவின் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய மின் உற்பத்தி திட்டங்கள் பற்றி தேடியபோது, ’தினத்தந்தி’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காண்முடிந்தது. அதில், 19-5-2023 என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1,859 கோடியே 12 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை தொடங்கிவைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், 2024 ஜீன் 1ஆம் தேதியன்று ’தினகரன்’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 54 புதிய துணை மின் நிலையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து, இது புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதையும் திமுக அமைக்கவில்லை என்று செல்வகுமார் சொல்வது தவறான தகவல் என்பது தெரிகிறது.
நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது குறித்து தேடியதில், ’BBC தமிழ்’ செய்தித்தளத்தில் உள்ள செய்தியின் படி, ’கடந்த 2022-ஆம் ஆண்டில் 52.6 சதவீதம் என பெரிய அளவில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், 2023-இல் ஜூலை மாதம் 2.18 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, 2024 ஜூலை மாதம் 4.8 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது, என கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நான்காவது ஆண்டாக மின் கட்டணம் 3.16 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதிலிருந்து, நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதாக செல்வகுமார் சொல்வது உண்மை தான் என்று தெரிகிறது.
இந்திய மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் மின்சார கட்டண அதிகமாக இருப்பதாக சொல்லப்படுவது குறித்து தேடினோம். ‘THE NEW INDIAN EXPRESS’ செய்தித்தளத்தில் 2024 டிசம்பர் மாதம் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில், ‘இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, வீட்டு நுகர்வோருக்கான சராசரி மின்சாரக் கட்டணம் தமிழ்நாட்டில் தான் மிகக் குறைவாக உள்ளது என அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பதாக’ அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் குறித்து தேடியதில், ‘தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்’ வெளியிட்டுள்ள 2024-25 நிதியாண்டிற்கான மின் கட்டணம் குறித்த ஆவணத்தில் இது விரிவாக குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்திற்கு அதன் பயன்பாடு அளவைப் பொறுத்தே கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதில் 400 KWh வரையிலான மின்சார பயன்பாட்டிற்கு 4.80 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், மருத்துவமனைகள், தனியார் தங்கும் விடுதிகள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் என ஒவ்வொன்றுக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின் வினியோகம் செய்கிறது. விவசாயம், குடிசை வீடுகளுக்கு முழுதும் இலவசமாகவும், கைத்தறி, விசைத்தறிக்கு, இலவசம் மற்றும் மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், வீட்டு நுகர்வோர்க்கான கட்டணம் தமிழ்நாட்டில் குறைவாகவே இருக்கிறது.
ஆனால், செல்வகுமார் பகிர்ந்துள்ள அட்டவணையில் தமிழ்நாட்டில் யூனிட் ஒன்றுக்கு 9.40 ரூபாய் வசூலிக்கப்படுவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி அது எந்த ஆண்டு, வீடு, குடியிருப்பு, தொழில் நிறுவனம் ஆகியவற்றில் எந்த பிரிவு என எதையும் குறிப்பிடவில்லை.

இது குறித்து தேடிய போது, ’இந்து தமிழ் திசை’-ல் வெளியான செய்தியில் இந்த அட்டவணையைக் காணமுடிந்தது. தொழில் ரீதியாக 10 போட்டி மாநிலங்களில் தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த அட்டவணை தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை மட்டுமே குறிக்கிறது என்பது தெளிவு.
மேற்கூறிய அனைத்து விவரங்களையும் தொகுத்து பார்க்கையில், தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண அட்டவணையை பதிவிட்டு, தமிழ்நாட்டில் பொதுவாகவே மின் கட்டணம் உயர்வாக இருப்பதாக திரித்து பரப்பப்படுவது தெளிவாகிறது.
முடிவு:
திமுகவின் கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் புதிய மின்சார உற்பத்தி திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை என்று தவறாக பரப்பிவருகிறார் தமிழ்நாடு பாஜக, தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார். மேலும், தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் மின் கட்டணம் அதிகமாக இருப்பதை குறிப்பிடும் அட்டவணையை பதிவிட்டு, பொதுவாகவே மின் கட்டணம் உயர்வாக இருப்பதாக திரித்து கூறுகிறார்.