யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கல்லூரிக்குள் நுழைந்து கூச்சலிட்டுள்ளார். அப்போது பயத்தில் வகுப்பறையிலிருந்த மாணவ, மாணவிகள் வெளியேறியுள்ளனர். மேலும் இஸ்லாமில் பெண்கள் படிக்க கூடாது என சொல்லப்படவில்லை.
பரவிய செய்தி
பங்களாதேசத்தில்… பெண்களை கல்லூரிகளில் இருந்து விரட்டும் ஜிகாதிகள்… பெண்கல்வி இஸ்லாத்தில் தடைசெய்ய பட்டதாம்..

விரிவான விளக்கம்
இஸ்லாம் மதத்தில் பெண் கல்வி தடை செய்யப்பட்டதால், வங்கதேசத்தில் கல்லூரி ஒன்றில் உள்ள பெண்களை முஸ்லிம் இளைஞர் ஒருவர் விரட்டுவதாக வீடியோ ஒன்று வலதுசாரிகளால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் கையில் கொம்புடன் வகுப்பறைக்குள் நுழைந்து கூச்சலிட்டதுடன், கையில் இருந்த கொம்பை வேகமாக தரையில் தட்டுகிறார். அங்கிருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேறுகின்றனர்.
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோவில், ‘Hazrat M. Hasan’ என்ற லோகோ உள்ளது. வங்கதேசத்தை மையமாக கொண்டு செயல்படக் கூடிய அந்த பேஸ்புக் பக்கத்தில் கடந்த அக்டோபர், 27ஆம் தேதி இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. பெங்கால் மொழியில் இருந்த அப்பதிவை மொழிபெயர்த்ததில் ‘சலிமுல்லா மருத்துவக் கல்லூரி’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை அறியமுடிந்தது.

இவற்றைக்கொண்டு தேடியதில், இந்த சம்பவம் பற்றி ‘Dhaka Post’, Medi Voice’ என்ற ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதை காணமுடிந்தது. அவற்றின் தலைப்பிலேயே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் வகுப்பறைக்குள் நுழைந்து பிரச்சனை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கதேசம், கிசோர்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த சுபைர் அலி என்ற 20 வயது இளைஞர் கடந்த 10 ஆண்டுகளாக மனநல பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் சலிமுல்லா மருத்துவக் கல்லூரி வகுப்பறைக்குள் குச்சியுடன் நுழைந்து கூச்சலிட்டுள்ளார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் பயத்தில் வகுப்பறையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஊடகத்திடம் பேசிய கல்லூரி முதல்வர் மஜ்ஹருல் ஷஹீன், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை உறுதி செய்துள்ளார்.
பரவக்கூடிய வீடியோவில், சுபைர் கூச்சலிடும் போது வகுப்பறையில் இருந்த மாணவிகள் மட்டுமின்றி மாணவர்களும் வெளியேறுவதை காணமுடிகிறது. இதனைக்கொண்டு பார்க்கையில் அவர் பெண்களை மட்டும் வகுப்பறையில் இருந்து விரட்டவில்லை என்பதை அறியலாம்.
மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நபர் வகுப்பறையில் நுழைந்து கூச்சலிட்டதை, இஸ்லாம் மதத்துடன் தொடர்புப்படுத்தி தவறான செய்தியை பரப்புகின்றனர். மேலும், இஸ்லாமில் பெண்கள் படிக்கக்கூடாது எனவும் சொல்லப்படவில்லை.
முடிவு:
இஸ்லாத்தில் பெண்கள் படிக்கக்கூடாது எனச் சொல்லப்பட்டு இருப்பதால் கல்லூரியிலிருந்த மாணவிகளை இளைஞர் ஒருவர் துரத்தியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கல்லூரிக்குள் நுழைந்து கூச்சலிட்டுள்ளார். அப்போது பயத்தில் வகுப்பறையிலிருந்த மாணவ, மாணவிகள் வெளியேறியுள்ளனர். மேலும் இஸ்லாத்தில் பெண்கள் படிக்கக்கூடாது எனச் சொல்லப்படவில்லை.