யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட தேவாலயம் இடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
அடுத்த ஆதித்யநாத் யோகியாக மாறினாரா ஜோசப் விஜய்
தொடர்ந்து இணைப்பில் இருங்கள்...
கிருத்துவ சொந்தங்களே தேவையா உங்களுக்கு இது...
கிறுத்துவ சகோதரர் ஆளா போகிறார் என்று நீங்கள் போட்ட இன்று உங்களுக்கு நீங்களே வைத்த வேட்டு...
@TVKVijayHQ @TVKPartyHQ உடனடியாக ராஜினாமா செய்

விரிவான விளக்கம்
கிறிஸ்த்துவ தேவாலயம் ஒன்று போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்படுகிறது. அதனை கண்டித்து மக்கள் போராடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘விஜய் தலைமையில் தவெக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலே உத்தர பிரதேச மாநிலத்தின் யோகி ஆதித்தியநாத் போன்று சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளங்கள் இடிக்கப்படுகிறது’ என்று சமூக வலைத்தளத்தில் திமுக ஆதரவாளரால் பரப்பப்படுகிறது.
அடுத்த ஆதித்யநாத் யோகியாக மாறினாரா ஜோசப் விஜய்
தொடர்ந்து இணைப்பில் இருங்கள்...
கிருத்துவ சொந்தங்களே தேவையா உங்களுக்கு இது...
கிறுத்துவ சகோதரர் ஆளா போகிறார் என்று நீங்கள் போட்ட இன்று உங்களுக்கு நீங்களே வைத்த வேட்டு... #TVKFailsTN@TVKVijayHQ @TVKPartyHQ உடனடியாக ராஜினாமா செய் pic.twitter.com/SY8oTtr4gg
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், ‘Asianet News’ செய்தி ஊடகத்தின் யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.
2026 மே 07ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியில், ‘கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பூப்பாரா என்ற கிராமத்தில் ஆற்றுப்படுக்கையில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதன் காரணமாக தேவாலயம் இடிக்கப்பட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தேடிய போது, ‘The Hindu’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, ‘கேரளா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, பூப்பாரா கிராமத்தில் 29 வீடுகள், 3 வழிபாட்டு நிறுவனங்கள், 56 கடைகள் உட்பட, பன்னியார் ஆற்றின் படுகையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட 88 கட்டிடங்களை இடுக்கி மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளதாக’ தெரியவருகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ கேரளா மாநிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக தேவாலயம் இடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெளிவாகிறது.
முடிவு:
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட தேவாலயம் இடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை, தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் தேவாலயம் இடிக்கப்படுவதாக தவறாக பரப்புகிறார்கள்.