யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
20 நபர்கள் வரையில் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதாகவே செய்திகள் சொல்கிறது. திருவல்லிக்கேணி ’ஹோட்டல் பிலால் பிரியாணி’ கடை அதிகாரிகளால் மூடப்பட்டது.
பரவிய செய்தி
போன வாரம்,.."தர்பூசணி சிவப்பா இருந்தா ஊசி போட்டு இருக்கும்"ன்னு புரளி கிளப்ப "கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனிகளிடம் லஞ்சம் வாங்கிட்டு" விவசாயிக வாழ்க்கைய சீரழித்தான்.
இந்த வாரம்,..பிலால் கடைல சாப்பிட்டு 55 பேர் மருத்துவமனைல இருக்கும் போது "ஆய்வு செய்யாம, சீல் கூட வைக்காம இருக்கான்"

விரிவான விளக்கம்
சமீபத்தில் தர்பூசணிப் பழங்களில் இராசயனம் கலக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இது பொது மக்கள் மத்தியில் தர்பூசணி பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து ’பொது மக்கள் தர்பூசணி சாப்பிடலாம்’ என்று விளக்கமளித்திருந்தார்.
போன வாரம்,.."தர்பூசணி சிவப்பா இருந்தா ஊசி போட்டு இருக்கும்"ன்னு புரளி கிளப்ப "கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனிகளிடம் லஞ்சம் வாங்கிட்டு" விவசாயிக வாழ்க்கைய சீரழித்தான்
இந்த வாரம்,..பிலால் கடைல சாப்பிட்டு 55 பேர் மருத்துவமனைல இருக்கும் போது "ஆய்வு செய்யாம, சீல் கூட வைக்காம இருக்கான்" 🤮… pic.twitter.com/CbDFEb19Hk
இந்நிலையில், ’தர்பூசணி வியாபாரிகளிடம் கெடுபிடியாக நடந்துகொண்ட சதீஷ்குமார் என்ற இந்த அதிகாரிதான், பிலால் உணவகத்தில் சாப்பிட்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 55 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தும், அந்த உணவகத்திற்கு சீல் வைக்காமல் இருக்கிறார்’ என்று பாஜகவினர் எக்ஸ் தளத்தில் பரப்புகின்றனர்.
உண்மை என்ன?
பிலால் உணவகத்தில் சாப்பிட்டு உடலநலக் கோளாறு ஏற்பட்டது குறித்து இணையத்தில் தேடியபோது, ‘THE HINDU’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது.

அதன்படி, ‘சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ’ஹோட்டல் பிலால் பிரியாணி’ என்ற உணவகத்தில் சாப்பிட்டதால் வாடிக்கையாளர்கள் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக எழுந்த புகாரின் பெயரில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த உணவகத்தை ஏப்ரல் 2ஆம் தேதியன்று சோதனையிட்டனர். சோதனைக்குப் பின்னர் அந்த உணவகம் மூடப்பட்டது. அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் இதனை திறக்கக்கூடாது என்றும் கூறப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் ’கடந்த மார்ச் 30ஆம் தேதி திருவல்லிக்கேணி ’ஹோட்டல் பிலால் பிரியாணி’ல் சாப்பிட்டதாகவும் அதனால் 6 நபர்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு தொண்டியார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்’ சொல்லப்பட்டது.
‘THE NEW INDIAN EXPRESS’ இது குறித்து வெளியிட்ட செய்தியில் ’20 நபர்கள் வரையில் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதாக’ குறிப்பிட்டிருக்கிறது.
இதிலிருந்து 55 நபர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக சொல்லப்படுவது தவறான தகவல் என்பது உறுதியாகிறது.
சென்னை மவுண்ட் ரோடு பிலால் ஹோட்டலுக்கு ஆய்வுக்கு சென்றபோது திடீரென வந்த ஃபோன் கால்.. சட்டென ஆய்வை நடத்தாமல் அப்படியே திரும்பிய உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்.. நடந்தது என்ன?#Chennai | #BilalHotel | #FoodSafetyOfficers | #Sathish | #PolimerNews pic.twitter.com/ipbzYKJWSM
மேலும், சென்னை அண்ணா சாலையில் உள்ள ‘பிலால் ஹோட்டல்’ என்ற மற்றொரு உணவகத்தில் சாப்பிட்டதால் இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ’ஐஸ் ஹவுஸ்’ காவல் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது. இதனை சோதனையிடச் சென்ற அதிகாரிகள் சோதனையிடாமல் திரும்பியதாகவும் வேறொரு செய்தியில் சொல்லப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "மவுண்ட் ரோட்டில் உள்ள பிலால் கடை குறித்து எங்களுக்கு தகவல் வரவில்லை” என்று அன்றைய தேதியில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரியாக இருந்த சதீஷ்குமார் கூறினார்.
இவ்வாறு உணவு காரணமாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக ‘பிலால்’ என்ற பெயருடைய இரண்டு வெவ்வேறு கடைகள் பற்றி செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு கடை அதிகாரிகளால் மூடப்பட்டுவிட்டது. இதனை ’பிலால் உணவகத்தால் 55 பேர் மருத்துவமனையில் உள்ளதாகவும், அந்த உணவகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை’ என்றும் பாஜகவினர் திரித்துப் பரப்புகிறார்கள்.
முடிவு:
உணவகத்தில் சாப்பிட்டதால் 55 நபர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக சொல்லப்படுவது தவறான தகவலாகும். மேலும், புகார் எழுந்த நிலையில் திருவல்லிக்கேணி ’ஹோட்டல் பிலால் பிரியாணி’ அதிகாரிகளால் மூடப்பட்டது. இதேபோல் அண்ணா சாலையில் உள்ள வேறொரு ’பிலால்’ உணவகத்தின் மீது புகார் எழுந்தும் அதிகாரிகள் சோதனை செய்யாமல் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டையும் இணைத்து திரித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது.