யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“உத்திரப் பிரதேசத்தில் பேட்டரியில் இயங்கும் வண்டிகள் முக்கிய சாலையில் போக அனுமதி இல்லை, எனவே அந்த வண்டிகளை நொறுக்கிய அதிகாரிகள்” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
பாக்கும் போது அழுகை வருகிறது! ஏழை என்றால் இலக்காரமா? உத்திர பிரதேசத்தில் பேட்டரி வண்டி முக்கிய சாலையில் போக அனுமதி இல்லை என்று சொல்லி அந்த வண்டியை நொறுக்கும் அதிகாரிகள்! குடித்து விட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய BMW, AADI CAR வாகனம் என்ன செய்தீர்கள் Mr Modi?
விரிவான விளக்கம்
“உத்திரப் பிரதேசத்தில் பேட்டரியில் இயங்கும் வண்டிகள் முக்கிய சாலையில் போக அனுமதி இல்லை, எனவே அந்த வண்டிகளை நொறுக்கிய அதிகாரிகள்” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், ரிக்ஷாக்கள் உடைத்து நொறுக்கப்படுவதையும், அதைக் கண்டு அந்த வண்டியின் உரிமையாளர்கள் அழுவதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “Centrist Nation TV“ யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோக் காட்சிகளைக் குறிப்பிட்டு மே 14 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
அச்செய்தியில், இது வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற சம்பவம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் தெளிவாகக் காண முடிகிறது.
எனவே பரவி வரும் செய்தி குறித்து மேலும் தேடியதில், “Dhaka Tribune” ஊடகப் பக்கத்தில் “ஒழுங்கை மீட்டெடுக்க முக்கிய சாலைகளில் ஆட்டோ ரிக்ஷாக்கள் தடை செய்யப்பட்டுள்ளன“ என்ற தலைப்பில் மே 14 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், “தலைநகரின் பிரதான சாலைகளில் பேட்டரியில் இயங்கும் ரிக்ஷாக்களுக்கு தடை விதிக்க டாக்கா வடக்கு நகரக் கழகம் (DNCC) மற்றும் டாக்கா பெருநகர காவல்துறை கூட்டு நடவடிக்கையைத் தொடங்கின.
சாலைகளில் ஒழுங்கை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல அங்கீகரிக்கப்படாத ரிக்ஷாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் பாதிக்கப்பட்ட மூன்று ஓட்டுநர்களுக்கு நிதி உதவி மற்றும் மறுவாழ்வு உதவியும் வழங்கப்பட்டுள்ளது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் பரவி வரும் வீடியோ, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது தான் என்பதை உறுதி செய்ய முடிந்தது. இந்நிலையில் பலரும் இதை உத்திரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், “உத்திரப் பிரதேசத்தில் பேட்டரியில் இயங்கும் வண்டிகள் முக்கிய சாலையில் போக அனுமதி இல்லை, எனவே அந்த வண்டிகளை நொறுக்கிய அதிகாரிகள்” என்று கூறி பரவும் வீடியோ, வங்கதேச தலைநகர் டாக்காவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.