யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பஜ்ரங் தள் அமைப்பின் வைசாலி மாவட்ட தலைவர் ஆர்யன் சிங் என்பவர் இந்து அல்லாதவர்கள் சிலர் கோயிலில் தங்கி இருந்ததாகக் கூறி அடித்த வீடியோவை, வங்கதேசத்தில் இஸ்லாமியர்கள் இந்துக்களைத் தாக்குவதாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
Hindus at Bagaledesh. டேய் எவனாவது இது பொய்னு வந்தீங்க செருப்பு பிஞ்சிரும் எல்லாவத்துக்கும் ஒரு விலை கொடுத்தே ஆகணும்டா. எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடுங்கடா பதில் குடுத்தே தீரணும்

விரிவான விளக்கம்
வங்கதேச அரசுக்கு எதிராக அந்நாட்டில் கட்டுக்கடங்காத போராட்டம் நடந்து வந்த நிலையில், அங்கு இந்துக்கள் இஸ்லாமியர்களால் தாக்கப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Hindus at Bagaledesh😡😡😡
— K.Ashok adv (@ashok777_kalam) August 11, 2024
இதற்கெல்லாம் ஒரு முடிவு உண்டு கதற வேண்டிய நேரம் வரும்
அமைதி மார்க்கம் 😡
டேய் எவனாவது இது பொய்னு வந்தீங்க செருப்பு பிஞ்சிரும்
எல்லாவத்துக்கும் ஒரு விலை கொடுத்தே ஆகணும்டா
எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடுங்கடா பதில் குடுத்தே தீரணும்#Bangladesh… pic.twitter.com/a4FBw1N2YH
அந்த வீடியோவில், காவி தலைப்பாகை மற்றும் வேட்டி அணிந்திருப்பவர்களை ஒருவர் கட்டை கொண்டு மிகக் கொடூரமாகத் தாக்குகிறார்.
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோ பற்றித் தேடியதில், இச்சம்பவம் குறித்து 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் ‘பிபிசி மராத்தி’ தளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகி இருப்பதை காணமுடிந்தது.

மராத்தி மொழியில் வெளியாகி இருந்த அக்கட்டுரையைக் கூகுள் டிரான்ஸ்லேட் உதவியுடன் மொழிபெயர்த்துப் படித்தோம். பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் நாராயணன் மகாதேவ் என்ற கோயில் அமைந்துள்ளது.
அந்த கோயிலில் சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் தங்கி இருப்பதாக அக்கோயில் பூசாரி பிந்து மகாராஜ் என்பவர் பஜ்ரங் தள் அமைப்பின் வைசாலி மாவட்ட தலைவர் ஆர்யன் சிங் என்பவரிடம் புகார் கொடுத்துள்ளார். அங்குத் தங்கி இருந்தவர்களை ஆர்யன் சிங் (Aryan Singh) கட்டையைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளார்.
கோயிலில் தங்கி இருந்தவர்கள் பிச்சை எடுப்பவர்கள் என்றும் அவர்களுக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஆர்யன் சிங் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் இருந்து இந்த சம்பவம் பீகாரில் நடந்தது என்றும் வீடியோவில் அடிக்கக்கூடிய நபர் இந்துத்துவ சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கும் பஜ்ரங் தள் என்ற அமைப்பின் மாவட்ட தலைவர் என்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது.
இதேபோல், ஜனவரி 2023ஆம் ஆண்டு வைசாலியில் உள்ள ஒரு பகுதியில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், உடல்நிலை சரியில்லாத இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை (நண்பர்) சந்தித்துவிட்டுத் திரும்புகையில் ’அவர்கள் மதமாற்றுகின்றனர்’ என பஜ்ரங் தள் அமைப்பினரால் கிறிஸ்தவ குடும்பத்தினர் தாக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தைப் பாராட்டி ஆர்யன் சிங் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதே பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த மோனு மானேசர் பசு பாதுகாவலர் என்கிற பெயரில் துப்பாக்கியுடன் வலம் வந்து கொண்டுள்ளார். பசு மாடுகளைக் கொண்டு சென்றதாகக் கூறி இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் எரித்துக் கொள்ளப்பட்ட வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
வங்கதேசத்துடன் தொடர்புப்படுத்திப் பல பொய் செய்திகளும் வதந்திகளும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அது குறித்த உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இந்து ரக்ஷா தளம் அமைப்பு கலவர வீடியோவை, வங்கதேச வீடியோ என்று தவறாகப் பரப்பும் வலதுசாரிகள்!
மேலும் படிக்க: வயதான இந்து ஒருவரை தூக்கிலிடும் இஸ்லாமியர்கள் எனப் பொய் செய்தி பரப்பும் வலதுசாரிகள்!
முடிவு:
வங்கதேசத்தில் இஸ்லாமியர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்குவதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. இது இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தள்-இன் வைசாலி மாவட்டத் தலைவர் ஆரியன் சிங், கோயில் ஒன்றில் தங்கியுள்ள சிலரை இந்து அல்ல எனச் சந்தேகப்பட்டுத் தாக்கும் வீடியோ.