யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது 2017ஆம் ஆண்டு வெளியான பழைய செய்தி. மேலும் போக்குவரத்து கழக சொத்துகள் அடமானம் வைக்கப்படுவது கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள விஷயமாகும்.
பரவிய செய்தி
இது என்னடா புது கதையா இருக்கு...
*அவசரத்துக்கு நகை அடகு வைப்போம்*
*திராவிட மாடல் அரசு பஸ்யே அடமானம் வச்சுட்டாங்க

விரிவான விளக்கம்
போக்குவரத்துக் கழகங்கள் அடமானத்தில் இயங்கி வருவதைப் பற்றி ’புதிய தலைமுறை’ செய்தித் தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக் காணொளியைப் பதிவிட்டு திமுக தலைமையிலான ’திராவிட மாடல்’ அரசு, போக்குவரத்துக் கழகங்களின் சொத்துகளை அடமானம் வைப்பதாக பாஜகவைச் சேர்ந்தவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பரப்புகிறார்.
உண்மை என்ன?
இது தொடர்பாக புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியின் தளத்தில் 11 நிமிடம் நீண்ட செய்தி வீடியோ ஒன்று காணக்கிடைத்தது. இந்த வீடியோ அந்த தளத்தில் 'Unlisted' செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே இந்த வீடியோ எடுத்து வைத்திருப்பவர்களால் மட்டுமே காணமுடியும். இந்த செய்தி வீடியோ 2017ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி பதிவேற்றப்பட்டிருப்பதாக வீடியோவின் ’Description’ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த செய்தியின்படி, “தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்கள் ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள மதுரை கீழவெளி வீதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்தார். அதன் மூலம் கிடைத்த தகவல்களின் படி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் பணிமனைகளும் அதன் சொத்துக்களும் வங்கிகளிடமும் அரசிடமும் அடமானத்தில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது” என்று குறிப்பிடப்படுகிறது.
பரப்பப்படும் வீடியோவில் காட்டப்பட்டுள்ள ’Metropolitan Transport Corporation (Chennai)’ என்று தலைப்பிடப்பட்டுள்ள ஆவணத்தில் கூட ”17/10/2017” என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதுபற்றிய விகடன் தளத்தில் 20/05/2017 அன்று ”அடமானத்தில் போக்குவரத்துக் கழகங்கள். அவமானத்தில் தமிழக அரசு!” என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது. அன்றைய காலத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மதுரை போக்குவரத்துக் கழகம், ’அதன் சொத்துக்களை அடமானம் வைப்பது 1974 ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது’ என்று தெரிவித்தது.
இதிலிருந்து, இந்த செய்தி 2017ஆம் ஆண்டு வெளியான ஒன்று என்பதும், போக்குவரத்துக் கழகங்களின் சொத்துகள் அடமானம் வைக்கப்படுவது கடந்த 50 ஆண்டுகளாக நடந்துவருகிறது என்பதும் தெளிவாகிறது. ஆனால், பாஜகவினர் இந்த பிரச்சனையை தற்போது நடந்ததுபோல செய்தியைத் திரித்துப் பரப்புகின்றனர்.
முடிவு:
இது 2017ஆம் ஆண்டு வெளியான பழைய செய்தி. இது தற்போதுதான் நடந்ததுபோல திரித்துப் பரப்பப்படுகிறது