
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter link | Archive link
விரிவான விளக்கம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கிருஸ்தவ மதம் மாறி கிருஸ்தவ ஊழியம் செய்யும் காட்சி தமிழக அரசியல் வாதிகள் எல்லோரும் பணம் வாங்கி கொண்டு மதம் மாறி விட்டார்கள் போல் தெரிகிறது இது தெரியாமல் இவர்களை எல்லாம் தலைவனாக ஏற்றுக் கொண்டு இவர்கள் பின்உண்மை தெரியாமல் அலையும் அப்பாவி ஹிந்து மக்கள் pic.twitter.com/RZo4hqJ5Ub
— வெற்றி தாமரை (@PSuyambuNadar) September 19, 2022
உண்மை என்ன ?
அன்புமணி ராமதாஸ் ஊழியம் செய்வதாக பரப்பப்படும் வீடியோவில் பாலிமர் செய்தியின் லோகோ இடம்பெற்று இருப்பதை பார்க்க முடிந்தது. இதுகுறித்து தேடிய போது, செப்டம்பர் 18ம் தேதி " பள்ளி பருவ நண்பர்களுடனான சந்திப்பில் பாட்டு பாடி அசத்திய அன்புமணி ராமதாஸ்… வைரலாகும் காணொலி! " என இவ்வீடியோவை பாலிமர் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இதேபோல், "தோழர், தோழிகள் கைதட்ட..! பாட்டு பாடி அசத்திய அன்புமணி ராமதாஸ் " எனும் தலைப்பில் தந்தி டிவியிலும் செய்தியாக வெளியாகி இருக்கிறது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மான்போர்டு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி கேரளா மாநிலத்தின் திருவனந்தப்புரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அப்பள்ளியின் முன்னாள் மாணவரான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும் போது, தனது பள்ளிப் பருவத்தில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வுகளை நினைவு கூர்ந்து இருந்தார். அப்போது, 6ம் வகுப்பு படிக்கும் போது பாடப்புத்தக்கத்தில் இடம்பெற்ற "ராபர்ட் பிராஸ்ட் " என்பவர் எழுதிய ஆங்கில செய்யுளை(போயம்) பற்றிக் கூறி விட்டு அந்த போயதை பாடி இருக்கிறார்.

வைரல் வீடியோவில் அன்புமணி ராமதாசிற்கு பின்னால் ஏற்காட்டில் உள்ள மான்போர்டு கிறிஸ்தவ பள்ளியின் லோகோ இடம்பெற்று உள்ளதை பார்க்கலாம்.
அன்புமணி ராமதாஸ் கிறிஸ்தவ ஊழியம் செய்வதாக பரப்பப்படும் தவறான தகவலுடன், 2016-ல் அன்புமணி மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகிய இருவரும் வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்த போது எடுக்கப்பட்ட படத்தையும் இணைத்து பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கிருஸ்தவ மதம் மாறி ஊழியம் செய்யும் காட்சி என பாஜகவினர் பரப்பும் தகவல் வதந்தி. அன்புமணி ராமதாஸ் படித்த பள்ளியின் முன்னாள் மாணவர்களுக்காக நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் படித்த காலத்தில் புத்தகத்தில் இருந்த போயம் ஒன்றை நினைவுக் கூர்ந்து பாடி இருக்கிறார் என அறிய முடிகிறது.