யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வங்கதேசத்தில் உள்ள இந்து பெண்களின் நிலையைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது
பரவிய செய்தி
பங்களாதேஷ் இந்து பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை
விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினர்கள் தாக்கப்படுவதாகக்கூறி பல வீடியோக்கள் வலதுசாரிகளால் தவறாகப் பரப்பப்பட்ட நிலையில், தற்போது வங்கதேசத்தில் உள்ள இந்து பெண்களின் நிலையைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், பல பெண்கள் மருத்துவமனைக்கு வெளியேயும், உள்ளேயும் வரிசையாக இறந்து கிடப்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது.
if it is true , what #bharath is doing ?
— ARS (@ARShrinivasan) August 20, 2024
We should remove #bangaladesh from the MAP. https://t.co/620nRcEEdG

உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை ‘Google Reverse Image Search’ மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், பரவி வரும் வீடியோவில் இருப்பதைப் போன்ற அதே காட்சிகளைக் கொண்ட வீடியோவைக் குறிப்பிட்டு ‘Spark Media‘ ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில், உத்தரப் பிரதேசம் - ஹத்ராஸ் மாவட்டத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் என்று குறிப்பிட்டு வீடியோ பதிவிடப்பட்டிருந்தது
🔴உத்தரப் பிரதேசம் - ஹத்ராஸ் மாவட்டத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்
— Spark Media (@SparkMedia_TN) July 2, 2024
🔹ஹத்ராஸ் அருகே உள்ள ரதிபன்பூரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரே இடத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிய நிலையில்,… pic.twitter.com/wk7j76jbNK
மேலும் இதே போன்று, ‘India Today’ ஊடகப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு கடந்த மாதம் 05 ஆம் தேதி (ஜூலை 05) செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியில், உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஜூலை 02 அன்று நடைபெற்ற 'போலே பாபா' சத்சங்க நிகழ்ச்சியில் (ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில்) 2,50,000 க்கும் அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் என கிட்டத்தட்ட 123 பேர் உயிரிழந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று, ‘Swadesh News’ ஊடகப் பக்கத்திலும் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு ஜூலை 02 அன்று “ஹத்ராஸ் சத்சங் நெரிசல்: 27 பேர் உயிரிழந்தனர்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தனர்.
இதன்மூலம் பரவி வரும் வீடியோ, உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஜூலை 02 அன்று நடைபெற்ற 'போலே பாபா' சத்சங்க நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் உயிரிழந்தபோது எடுக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது. உபியில் எடுக்கப்பட்ட வீடியோவை, வங்கதேசத்தில் இந்துப் பெண்களின் நிலை என்று கூறி வலதுசாரிகள் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், வங்கதேசத்தில் உள்ள இந்து பெண்களின் நிலையைப் பாருங்கள் என்று கூறி பரவும் வீடியோ, உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடைபெற்ற 'போலே பாபா' சத்சங்க நிகழ்ச்சியோடு தொடர்புடையது என்பதை அறியமுடிகிறது.
