யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ, மேற்குவங்க மாநிலத்தின் ‘கந்தகோஷ்’ பகுதியில் உள்ள காளி கோவில் திருவிழாவின் போது எடுக்கப்பட்டதாகும்.
பரவிய செய்தி
#SaveBangladeshiHindus ஒன்றரை கோடி இந்துக்கள் வாழும் பங்களாதேஷ் நாட்டில் இந்து கோயில்கள் அடித்து உடைக்கப்படுகிறது. இந்துக்கள் நாடோடிகளாக விரட்டப்படுகிறார்கள். உணர்வுள்ள இந்துக்களே உங்கள் ஒற்றுமையை காட்டுங்கள்

விரிவான விளக்கம்
’ஒரு பெரிய சிலையை கூட்டமாக சேர்ந்து உடைக்கிறார்கள். அந்த சிலையின் மீது இருவர் ஏறி அதன் தலையை உடைத்து எடுக்கிறார்கள்’. இப்படி காட்சிபடுத்தும் வீடியோ ஒன்றினை பதிவிட்டு, ”பங்களாதேஷ் நாட்டில் இந்து கோயில்கள் அடித்து உடைக்கப்படுகிறது” என்று ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், பேஸ்புக் தளத்தில் ‘சுல்தான்பூர் காளி மாதா நிரஞ்சன்’ என்று பங்களா மொழியில் எழுதப்பட்ட தலைப்பில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. இந்த வீடியோப் பதிவில் ‘கந்தகோஷ்’ என்று Location கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், இதுபற்றி தேடியபோது, மேற்குவங்க மாநிலத்தின் பர்தமான் மாவட்டத்தில் ‘கந்தகோஷ்’ என்ற பகுதி இருப்பது தெரியவருகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, ’Burdwan Khandghosh Kali Puja’ என்ற keywords மூலம் இணையத்தில் தேடுகையில், 'Dainik Statesman' என்ற செய்தித்தளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் துர்கா பூஜை பற்றிய செய்திக் கட்டுரையை காணமுடிந்தது.

அதில் குறிப்பிட்டுள்ளதன்படி, ’பர்தமான் மாவட்டத்தில் ‘கந்தகோஷ்’ என்ற பகுதியில் உள்ள காளி கோவில் திருவிழாவின் போது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலை வடிவமைக்கப்படுவதும், கரைக்கப்படுவதும் வழக்கம்’ என்பதை தெரிந்துகொள்கிறோம். அதன்படி, இந்தாண்டு காளி சிலை கரைக்கப்பட்டிருக்கிறது. 12 அடியில் இருக்கும் இந்த பெரிய சிலையை குளத்திற்கு எடுத்துச் சென்று கரைக்கமுடியாது. ஆகையால், இந்த சிலையை பக்தர்களே உடைத்து, அந்த துண்டுகளை எடுத்துச் சென்று கரைப்பார்கள்.
காளி கோவில் திருவிழாவில் சிலை கரைப்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோவை, மதப் பிரிவினையை தூண்டும் வகையில் ”பங்களாதேஷில் இந்துக் கோவில்கள் அடித்து உடைக்கப்படுகிறது” என்று தவறாக பரப்பப்படுகிறது.
முடிவு:
இந்த வீடியோ பங்களாதேஷில் எடுக்கப்பட்டது அல்ல. மேற்குவங்க மாநிலத்தின் ‘கந்தகோஷ்’ பகுதியில் உள்ள காளி கோவில் திருவிழாவின் போது எடுக்கப்பட்டது. இதனைத் திரித்து பங்களாதேஷில் கோவில்கள் உடைக்கப்படுகிறது என்று தவறான செய்தியை பரப்புகின்றனர்.