யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது. இதனை மத வெறுப்புக் கண்ணோட்டத்துடன் பாஜக ஆதரவாளர்கள் பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
முஸ்லிம் சிறுவன் அவர் கோவில் முன் பூ விற்கிறார் இந்த பூக்களை கடவுளுக்கு சமர்பிக்கிறோம், இவர்கள் குழந்தைகள், ஏழைகள், இந்த ஏழைகள் இந்த வயதிலும் உழைக்க வேண்டும் அவர்களிடமிருந்து வாங்க வேண்டும் என்று பரிதாபப்பட்டு அவர்களிடமிருந்து பூக்களை வாங்குகிறோம். இவன் என்ன செய்கிறான் பாருங்கள்…

விரிவான விளக்கம்
சாலையோரத்தில் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் ஒரு சிறுவன் அமர்ந்து, தன்னிடமிருக்கும் பூமாலைகளில் தண்ணீரை உமிழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சிறிய வீடியோவை பதிவிட்டு, இந்த சிறுவன் ஒரு முஸ்லிம் என்றும், கோவிலில் கடவுளுக்கு சமர்ப்பிக்கும் பூமாலையில் அவன் தண்ணீரை உமிழ்கிறான் என்றும் சமூக வலைதளமான ’எக்ஸ்’ல் தகவல் பரப்பப்படுகிறது. இந்த டிவீட் பின்னர் delete செய்யப்பட்டுவிட்டது.

உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Jaunpuriya Hub’ என்னும் பேஸ்புக் பக்கத்தில், இந்த வீடியோவை பதிவிட்டு ”பெண்கள் மாலைகள் வாங்கும் போது ஆதார் அட்டையைப் பார்த்த பின்புதான் வாங்கவேண்டும். இல்லையென்றால், அவர்கள் கழுவப்பட்ட மாலைகளைத்தான் அணிய நேரிடம்” என்று நகைச்சுவையாக எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது.

இந்த வீடியோவின், பின்னணியில் நிற்கும் கார் ஒன்றின் வாகன பதிவெண்ணைக் காண்கிறோம். அதில் ‘AQV 503’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்திய மாநிலங்கள் அனைத்தின் வாகன பதிவெண்களும் “ TN, AP, GJ” என்று இரண்டு எழுத்துக்களில் தான் தொடங்கும். மேலும், இந்திய வாகனப் பதிவெண்ணிற்கான மாதிரியுடன் இது ஒத்துப்போகவில்லை.
இதனால், வேறு நாடுகளின் வாகனப் பதிவெண் மாதிரிகளைத் தேடினோம். குறிப்பாக தெற்காசிய நாடுகளின் பதிவெண் மாதிரிகளைத் தேடியதில், பாகிஸ்தான் நாட்டின் ’சிந்து (Sindh)’ மாகாணத்தின் வாகனப் பதிவெண் மாதிரியுடன் ஒத்துப்போவதைக் காண்கிறோம். மூன்று ஆங்கில எழுத்துக்கள், அதைத் தொடர்ந்து மூன்று இலக்க எண்கள், மஞ்சள் பின்புலத்தில் கருப்பு எழுத்துகள் என வீடியோவில் இருக்கும் பதிவெண் மாதிரியுடன் இது ஒத்துப்போகிறது.
இதிலிருந்து, இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்பது நிரூபணமாகிறது. ஆனால், பாஜக ஆதரவாளர்கள் இந்த வீடியோவை மதக் கண்ணோட்டத்தில் திரித்துப் பரப்புகின்றனர்.
ஏற்கனவே, ’முஸ்லிம் மக்கள் நடத்தும் உணவுக்கடைகளில் சாப்பாட்டில் எச்சில் துப்பிக்கொடுக்கிறார்கள்’ என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அவர்கள் ’எச்சில் ஜிகாத்’ என்று பெயரும் வைத்துள்ளனர். ’எல்லாவற்றிலும் எச்சில் துப்பும் முஸ்லிம்கள் அசுத்தமானவர்கள். அதனால், அவர்களையும் அவர்களது பொருட்களையும் புறக்கணியுங்கள்’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இதனால்தான், யாரோ ஒரு சிறுவன் எச்சில் துப்பும் வீடியோவை பதிவிட்டு அதனை இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்திற்கு ஏதுவாக இந்துத்துவ ஆதரவாளர்கள் பரப்புகிறார்கள்.
முடிவு:
இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது. பாஜக ஆதரவாளர்கள் இதனை முஸ்லிம்களுடன் இணைத்து மத வெறுப்பு கண்ணோட்டத்துடன் திரித்துப் பரப்புகிறார்கள்.