யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த புகைப்படத்தில் இருப்பது சோழர் காலத்து நாணயம் அல்ல. திருவலங்காடு செப்புத் தகடுகளின் இலைகளை இணைக்கும் வட்ட வடிவ முத்திரை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று, அடி திருவாதிரை மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டாடர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த இந்த விழாவில், பிரதமர் மோடி சோழப் பேரரசன் முதலாம் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார். அந்த நினைவு நாணயத்தில் தமிழ் மொழி இல்லை என்பது சமூக வலைத்தளத்தில் விவாதமானது.
இது சோழர் நாணயம். இதுல ஏன் தமிழ் இல்லனு சொல்லு போலி தமிழ் தேசிய முகவரே 😂 https://t.co/e282zy42nj pic.twitter.com/rdFC05djL3
இந்நிலையில், வட்ட வடிவத்தில் இருக்கும் பழக்கால பொருள் ஒன்றின் புகைப்படத்தை பதிவிட்டு, ’இது தான் சோழர் காலத்து நாணயம். இதிலே தமிழ் இல்லை’ என்று சமூக வலைத்தளத்தில் பாஜக ஆதரவாளரால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த புகைப்படத்தைக் கொண்டு ‘Reverse Image Search’ முறையில் தேடியதில், ’THE HINDU’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், ‘இந்த புகைப்படத்தில் இருப்பது திருவலங்காடு செப்புத் தகடுகளை இணைக்கும் வகையில் உள்ள வட்ட வடிவ முத்திரை’ என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த ‘திருவலங்காடு செப்புத் தகடுகள்’ என்பது மொத்தம் 31 தகடுகளைக் கொண்டதாகும். அதில் பத்து தகடுகள் சமஸ்கிருதத்திலும் மீதமுள்ள 21 தகடுகள் தமிழிலும் இருக்கிறது. இந்த செப்புத் தகடுகளில் பொறிபட்டுள்ள எழுத்துக்களை சமஸ்கிருதப் பிரிவு, முதல் தமிழ்ப் பிரிவு, இரண்டாவது தமிழ்ப் பிரிவு என்று மூன்று பிரிவாக பிரிக்கலாம். இதில் தமிழ் பகுதிகள் முதலில் எழுதப்பட்டிருப்பதாகவும், சமஸ்கிருதப் பகுதி பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இதில் உள்ள இரண்டாம் தமிழ்ப்பகுதி ராஜேந்திர சோழனின் 6ஆம் ஆண்டு ஆட்சியை குறிப்பதால் இந்த செப்பு தகடுகள் கி.பி. 1018 ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த செப்புத் தகடுகளில் ராஜேந்திர சோழன் பழையனூர் கிராமத்தை திருவாலங்காடு சிவன் கோவிலுக்கு பரிசாக வழங்கிய அரச ஆணை (Royal order) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சமஸ்கிருதத்தில் உள்ள குறிப்புகள் சோழர்களின் பரம்பரை சூரியனிலிருந்து வந்ததாக சொல்லும் புராணக் கதை போல் எழுதப்பட்டுள்ளது. தமிழில் உள்ள குறிப்புகள், நிலக்கொடை வழங்கப்பட்ட அரச ஆணை பற்றியும், நிலத்தின் எல்லைகள் பற்றியும், இந்த நிலத்திற்கான வரி விலக்குகள், சிறப்புரிமைகள் பற்றியும் உள்ளது.

மேலும், சோழர் காலத்து நாணயங்கள் குறித்து தேடியதில், C.H. பிடல்ப் எழுதிய ’சோழர்களின் நாணயங்கள்’ என்ற புத்தகத்தை காணமுடிந்தது. அதன் இறுதிப் பக்கங்களில், 64 விதமான நாணயங்களின் புகைப்படங்கள் உள்ளது. அதில் எதிலுமே எழுத்துக்கள் பொறிக்கப்படவில்லை. இதிலிருந்து சோழர் காலத்தில் பொதுவாக நாணயங்களில் எவ்வித எழுத்துக்களும் பொறிக்கப்படவில்லை என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது சோழர் காலத்து நாணயம் இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
திருவலங்காடு செப்புத் தகடுகளின் இலைகளை இணைக்கும் வட்ட வடிவ முத்திரையை சோழர் காலத்து நாணயம் என்று பாஜக ஆதரவாளர் தவறான தகவலை பரப்பி வருகிறார்.
