யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சிதம்பரம் கீழ ராஜ வீதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி, போக்குவரத்து விதிகளை மக்கள் சரியாக கடைபிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
சிதம்பரம் கீழ ராஜ வீதி... இப்படி சரியாக நடப்பது தான் நாங்க..
விரிவான விளக்கம்
சிதம்பரம் கீழ ராஜ வீதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி, போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்து நீண்ட வரிசையில் மக்கள் சாலையில் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் இதே புகைப்படம் குஜராத்தில் உள்ள சூரத் நகரில் எடுக்கப்பட்டது என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதையும் காணமுடிகிறது.
Surat, Gujrat .... Nice to see people with good civic sense 👍 pic.twitter.com/BMqs8FXo6s
— 24 (@Chilled_Yogi) April 1, 2024
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், கடந்த 2022 ஆண்டில் மிசோரம் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு இதே புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதை அறியமுடிந்தது.
I have seen this kind of discipline only 👇in Mizoram. There are no fancy cars, no big egos, no road rage, no honking and no तू जानता नहीं है मेरा बाप कौन है.... no one is in a tearing hurry...there is calm and serenity all around... pic.twitter.com/ZAkXNNcES4
— Sandeep Ahlawat (@SandyAhlawat89) March 1, 2022
எனவே இதுகுறித்து மேலும் தேடியதில், ‘Firstpost’ ஊடகப் பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 02 அன்று “நெரிசலின் போது போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் பயணிகள் இதயங்களை வென்றார்கள், வைரல் படத்தை இங்கே பாருங்கள்“ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. அதில் “இந்த படத்தை சந்தீப் அஹ்லாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று, ‘Hindustantimes’ வெளியிட்டுள்ள செய்தியிலும், “ஆனந்த் மஹிந்திரா சமீபத்திய தனது எக்ஸ் பக்கத்தில், சாலை விதிகளைப் பின்பற்றியதற்காக மிசோரம் மாநிலத்தைப் பாராட்டினார். மேலும் இது நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தியை உணர்த்துகிறது என்றும் கூறியுள்ளார். மிசோரம் மாநிலத்தில் இது படம்பிடிக்கப்பட்டதாகவும், அதன் போக்குவரத்து துறையில் அற்புதமான ஒழுக்கத்தை இது காட்டுவதாகவும் கூறி படத்தை பகிர்ந்துள்ளார்“ என்றும் அதில் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.

இதன்மூலம் இது கடந்த 2022ஆம் ஆண்டு மிசோரம் மாநிலத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பதை தெளிவாக அறியமுடிகிறது.
மேலும் படிக்க: போக்குவரத்து நெரிசலிலும் விதியை மீறாத மிசோரம் மக்கள்|வைரலாகும் புகைப்படம் ?
இதற்கு முன்பும் மிசோரத்தில் போக்குவரத்து விதிகளை மீறாத மக்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று கடந்த 2019ஆம் ஆண்டில் வைரலாகப் பரவியது. அப்போதும் இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
முடிவு:
நம் தேடலில், சிதம்பரத்தில் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்கும் மக்கள் எனப் பரவும் புகைப்படம், கடந்த 2022ஆம் ஆண்டு மிசோரம் மாநிலத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பதை அறியமுடிகிறது.

