யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முற்றுகையிடம் போராட்டத்தில், சீமான் உருவபடத்தை செருப்பால் அடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் Edit செய்யப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்து சில நாட்களாக பெரியார் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார். இதனை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம் மற்றும் பிற பெரியாரிய ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி 22ஆம் தேதி நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பெரியாரிய அமைப்பின் கொடிகள் பின்புலத்தில் இருக்க, கருப்புச் சட்டை அணிந்த முதியர் ஒருவர் பெரியாரின் உருவப்படத்தை செருப்பால் அடிப்பது போன்ற புகைப்படத்தை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ கணக்கில் பரப்பிவருகிறார்.
மேலும், முற்றுகைப் போராட்டம் குறித்து ‘சாட்டை’ என்ற யூட்யூப் தளத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், ‘முற்றுகை போராட்டத்திற்கு வந்தவர்கள் யார் உருவப்படம் என்று தெரியாமலே, செருப்பால் அடித்துக்கொண்டிருந்ததாக’ கேலியான தொனியில் பேசினார்.
உண்மை என்ன:
ஜனவரி 22ஆம் தேதி சீமான் வீடு முற்றுகையிடும் போராட்டம் பற்றிய பல்வேறு செய்திகளைத் தேடியதில், ’Oneindia Tamil’ யூட்யூப் தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது.

இந்த வீடியோவின் 1.59 நிமிடத்தில், “நான் கெட்டவன் இல்ல! கேடு கெட்டவன்!” என்ற வாசகம் எழுதி சீமானின் உருவப்படம் உள்ள பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இது பரப்பப்படும் புகைப்படத்தில் உள்ள பெரியார் உருவப்படம் உள்ள பேனர் போலவே இள மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களில் இருப்பதைக் காண்கிறோம்.
மேலும், பரப்பப்படும் புகைப்படத்தில் பெரியாரின் உருவப்படத்திற்கு கீழே ”நான்” என்ற எழுதியிருப்பதைக் காண்கிறோம். இது மேற்கூறிய சீமானின் உருவப்படத்தின் கீழுள்ள வாகசத்தின் தொடக்க வார்த்தை ஆகும்.
மேலும் தேடியதில், இந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றைக் காணமுடிந்தது. அதில், முதியர் ஒருவர் சீமானின் உருவப்படத்தை செருப்பால் அடிப்பது தெளிவாகத் பதிவாகியுள்ளது. இந்த காட்சி அப்படியே பரப்பப்படும் புகைப்படத்துடன் ஒத்துப்போகிறது. இதனை Edit செய்து சீமான் உருவப்படத்திற்கு பதிலாக பெரியார் உருவப்படமாக மாற்றியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
முடிவு:
இவ்வாறு Edit செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை கொண்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய அதரவாளர்களே பெரியார் உருவப்படத்தை செருப்பால் அடித்ததாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் சமூகவலைதளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர்.
