யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த ஜனவரி மாதம் சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த டிஜிட்டல் போஸ்டரை Edit செய்து, மீண்டும் இதுபோன்றதொரு நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் நடக்கவுள்ளதாகப் பொய் செய்தி பரப்பிவருகிறார்கள்.
பரவிய செய்தி
மீண்டும் மீண்டும் மதக் கலவரத்தை தூண்டும் இஸ்லாமிய அமைப்புகள்.
சகோதரத்துவம் பேசிக்கொண்டே இந்துக்களுக்கு எதிராக களமிறங்கும் அமைப்புகள்.

விரிவான விளக்கம்
மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் சுப்பிரமணிய சாமி கோவில், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயில், சமண குகைகள் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகியவை அமைந்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து சிக்கந்தர் பாதுஷா தர்காவில் கந்தூரி (ஆடு பலியிடுதல்) கொடுப்பது பற்றிய சர்ச்சை நடைபெற்று வருகிறது. இந்த சர்ச்சையின் உச்சமாகக் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, மதுரை பழங்காநத்தத்தில் ’இந்து முன்னணி’ ஆயிரக் கணக்கில் ஆட்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா, மதங்களுக்கு இடையேயான மோதலை தூண்டும் வகையில் பேசினார்.
இதன் பதற்றம் தணிவதற்குள், ’மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் வரும் பிப்ரவரி 18ஆம் தேதியன்று திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் மலையில் ஆடு கோழி அறுத்து சமூக நல்லிணக்கத்திற்கான சமபந்தி விருந்து நடத்தப் போவதாக’ அழைப்புவிடுத்து டிஜிட்டல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டதாக இந்துத்துவவாதிகள் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்கள். இதனை ‘தமிழ் ஜனம்’ இணைய செய்தி சேனல் செய்தியாக வெளியிட்டுள்ளது.


உண்மை என்ன?
பரப்பப்படும் டிஜிட்டல் போஸ்டரை ‘Reverse Image Searching’ முறையில் தேடியதில், ‘MEENA IYER’ என்ற ’எக்ஸ் (டிவிட்டர்)’ பக்கத்தில் கடந்த ஜனவரி 18ஆம் பதிவிடப்பட்டிருந்த இதே டிஜிட்டல் போஸ்டரை காண முடிந்தது. இந்த போஸ்டரில் ‘சிக்கந்தர் மலையில் ஆடு கோழி அறுத்து சமூக நல்லிணக்கத்திற்கான சமபந்தி விருந்து ஜனவரி 18 2025 நடைபெறவிருப்பதாக’ குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் தேடுகையில், ’News7 தமிழ்’ ஊடகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஜனவரி 18 அன்று பதிவிடப்பட்டிருந்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், ”சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சமூக நல்லிணக்கத்திற்கான சமபந்தி விருந்து நடைபெறப் போவதாகப் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு; திருப்பரங்குன்றம் மலையடிவாரம் அருகே காவல்துறையினர் குவிப்பு” என்ற குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதேபோல் ஜனவரி 18 அன்று ‘புதிய தலைமுறை’ செய்தித்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தியில், ’2025 ஜனவரி 18ஆம் தேதி காலையில் சிக்கந்தர் தர்கா பள்ளிவாசலில் கோழி, ஆடு பலியிட்டு சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகச் சமபந்தி விருந்து நடைபெறுவதாக வந்த தகவலை ஒட்டி திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் கோட்டை தெரு பாதை அடைக்கப்பட்டதாக’ குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், ’மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்' தரவிலிருந்து பிப்ரவரி 18 கந்தூரி சமபந்தி பற்றிய அறிவிப்பு ஏதும் செய்யவில்லை என்றும் இவ்வாறு அவதூறு செய்தியை பரப்புபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கை 10/02/2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, சிக்கந்தர் தர்காவில் கோழி, ஆடு வெட்டி சமபந்தி விருந்து நடைபெறுவதாகச் சொல்லும் விவகாரம் ஜனவரி மாதம் நடந்த ஒன்று என்பது தெளிவாகிறது. இந்த சமபந்தி விருந்து பற்றி அறிவிக்கும் போஸ்டரில் ஜனவரி 18 தேதி என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை Edit செய்து பிப்ரவரி 18 என்று மாற்றியுள்ளனர்.
முடிவு:
கடந்த ஜனவரி மாதம் சமூக வலைத்தளங்களில் பரவிய டிஜிட்டல் போஸ்டரை Edit செய்து, தற்போது விடுக்கப்பட்ட அறிவிப்பு என இரு மதச் சமூகங்களுக்கு இடையில் வெறுப்பைத் தூண்டும் வகையில் தவறான தகவலை இந்துத்துவவாதிகள் பரப்பி வருகின்றனர்.