யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த கொலைச் சம்பவம் கடந்த மே மாதம் ஹைதராபாத்தில் உள்ள Red Hills என்னும் பகுதியில் நடந்ததாகும்.
பரவிய செய்தி
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத M. K. Stalin ஆட்சி..! பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொ*றானுக, அருமையான மாடல் திமுக மாடல் #DmKfailsTN

விரிவான விளக்கம்
இரு சக்கர வாகனத்தில் வரும் ஒருவரை, அவர் வருவதற்காகவே காத்திருந்த இருவர் கொடூரமாக தாக்குகிறார்கள். தாக்கிவிட்டு, இவர்களை தப்பிக்க செய்வதற்காக அங்கே காத்திருந்த மற்றொரு நபருடன் இன்னொரு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்கிறார்கள். இந்த காட்சி CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ’இந்த சம்பவம் தற்போது திமுக ஆட்சியின் போது தமிழ்நாட்டில் நடந்தது’ என்று பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Meem tv’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில், அயன் குரேஷி என்ற இளைஞர் ரெட் ஹில்ஸ் என்னும் பகுதியில் உள்ள நிலோஃபர் ஹோட்டல் அருகில் கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு தேடுகையில், ’Munsif News’ என்ற செய்தித்தளத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது. 2025 மே மாதம் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியில், ‘இந்த கொலைச் சம்பவம் ஹைதராபாத் அருகில் உள்ள Red Hills-ல் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொலை செய்யப்பட்டவர் அயன் குரேஷி என்பதும், இந்த அயன் குரேஷி 2020ஆம் ஆண்டில் மைனராக இருக்கும் போது ஒருவரை கொலை செய்ததாகவும் அதற்கு பழி தீர்க்கும் விதமாக அவர் இப்போது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ’THE HINDU’ செய்தித்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘அயன் குரேஷி மற்றும் அவரது உறுவினர்கள் குடும்பத் தகராறு காரணமாக 2020ஆம் ஆண்டு ஒரு கொலை செய்ததாகவும் அதற்கு பழி வாங்கவே இப்போது அயன் குரேஷி கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கை ’நம்பல்லி’ போலீஸார் விசாரித்து வருவதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த கொலைச் சம்பவம் கடந்த மே மாதம் ஹைதராபாத் அருகில் உள்ள Red Hills என்னும் பகுதியில் நடந்தது என்பது உறுதியாகிறது.
முடிவு:
கடந்த மே மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் அருகில் உள்ள Red Hills என்னும் பகுதியில் நடந்த கொலையை தமிழ்நாட்டில் நடந்ததாக தவறாக பரப்புகிறார்கள்.