யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வங்கதேசத்தில் உள்ள ஹிந்து சாமியார்கள் கொடூரமான முறையில் தாக்கப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
பங்களாதேஷில் ஹிந்து சாமியார்கள் கொடூரமான முறையில் தாக்கப்படும் காட்சி... இவர்கள் மனிதர்களா?? இல்லை மிருகங்களா?? அட! காட்டுமிராண்டி கூட்டமே.! ஆனால் பாரதத்தில் எந்த கலவரம் வந்தாலும் இங்கே இருக்குற துலுக்கனுங்க இது மாதிரி உதை வாங்குவது இல்லையே ஹிந்துக்களிடம். அது ஏன்??
விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் உள்ள ஹிந்து சாமியார்கள் கொடூரமான முறையில் தாக்கப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில், காவிநிற உடையில் உள்ள சிலரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்குவதை தெளிவாகக் காணமுடிகிறது.

உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், ‘Zee News’ யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு இது லக்னோவில் நடந்த சம்பவம் என்று குறிப்பிட்டு ஆகஸ்ட் 10 அன்று செய்தி வெளியிட்டிருந்ததைக் காணமுடிந்தது.
இதே போன்று ‘Free Press Journal‘ ஊடகப் பக்கத்திலும், பரவி வரும் வீடியோ காட்சிகளைக் குறிப்பிட்டு “காணொளி: லக்னோவில் திருட்டு சம்பவத்துக்குப் பிறகு சாதுக்களாகக் காட்சியளிக்கும் 4 ஆண்கள் கிராம மக்களால் செருப்பால் கொடூரமாக தாக்கப்பட்டனர்“ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தனர்.
அதில், “உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சாதுக்கள் போல் நடித்து மக்களின் விலையுயர்ந்த பொருட்களையும் பணத்தையும் கொள்ளையடித்த 4 இளைஞர்கள் கிராம மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். கடுமையாக தாக்கப்பட்ட பின்னர், அந்த நபர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்மூலம் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் சாதுக்கள் வேடமிட்டு திருட்டுத்தொழிலில் ஈடுப்பட்ட நான்கு பேரை பொதுமக்கள் அடித்து போலீசாரிடம் ஒப்படைத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, வங்கதேசத்தில் இந்து சாமியார்கள் தாக்கப்படுவதாகக் கூறி வலதுசாரிகள் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், வங்கதேசத்தில் உள்ள ஹிந்து சாமியார்கள் கொடூரமான முறையில் தாக்கப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பது தெளிவாகிறது.
