யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சாலவன்குப்பத்தை காட்டிலும் கீழடியே பழமையான வரலாற்றைக் கொண்டது.
பரவிய செய்தி
கீழடியை விடப் பழமையான முருகன் கோவில். சுனாமிக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்டது. இதனைப் பாதுகாக்காததால் வெய்யிலிலும் மழையிலும் பண்டைய எழுத்துக்கள் சேதமாகிறது. ஆனால், சனாதானத்துடன் தொடர்பில்லாத கீழடியை திமுகவும் கிறிஸ்தவ திருச்சபையும் ஊக்குவிக்கிறது. உண்மையான தமிழர்கள் இந்துக்கள்.

விரிவான விளக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சாலவன்குப்பத்தில் கடந்த 2005ம் ஆண்டு பழமையான முருகன் கோவில் ஒன்று தொல்லியல் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த கோவில் கீழடியை விடப் பழமையானது என்று இந்து மக்கள் கட்சி தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
உண்மை என்ன?
இந்து மக்கள் கட்சியின் பதிவில், ‘SALUVANKUPPAM EXCAVATIONS’ என்ற பெயர் உள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையால் வெளியிடப்பட்ட இப்புத்தகத்தை சத்யபாமா பத்ரிநாத் என்பவர் எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தில் சாலவன்குப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. அகழாய்வு செய்யப்பட்ட இடத்தில் 3 மீட்டர் ஆழத்தில் எடுக்கப்பட்ட கரித்துண்டுகளை (charcoal) கார்பன் டேட்டிங் சோதனை செய்கையில் அதன் காலம் பொ.ஆ.பி. (பொது ஆண்டுக்குப் பின் - கிபி) 405 - 564 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து மேல் மட்டத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் பொ.ஆ.பி. 1019 - 1161 காலகட்டத்தில் இருப்பவை கோவில் புனரமைப்பு செய்யப்பட்ட காலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் குலோத்துங்கன் இக்கோவிலை மீண்டும் கட்டுவதற்காக மேற்கொண்ட முயற்சிகளும் அங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பல்வேறு காலகட்டத்தில் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் எடுக்கப்பட்ட பொருட்களில் மிகப் பழமையான காலகட்டம் என்றால் அது பொ.ஆ.பி. 405 - 564-க்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் பல ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. இவ்விடத்தில் எடுக்கப்பட்ட பொருட்கள் கார்பன் டேட்டிங் சோதனைக்கு உட்படுத்தியதில், அதன் காலம் பொ.ஆ.முன் (கிமு) 6ம் நூற்றாண்டு (பொ.ஆ.மு. 580) எனத் தெரியவந்துள்ளதாகத் தமிழ்நாடு தொல்லியல் துறை தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலவன்குப்பத்தில் எடுக்கப்பட்ட பொருளின் மிகப் பழமையான காலத்திற்கும் (பொ.ஆ.பி. 405 - 564) கீழடியின் காலமான 6ம் நூற்றாண்டுக்கும் (பொ.ஆ.மு) ஏறத்தாழ 1000 ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது. கீழடி - சாலவன்குப்பத்தை காட்டிலும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் முந்தைய வரலாற்றைக் கொண்டது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
மேலும், சாலவன்குப்பத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் கட்டடங்களைப் பாதுகாக்க மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீதர் தலைமையில், இந்தியத் தொல்லியல் துறையின் வேதியியல் பிரிவினர் பராமரிப்பு பணிகளைத் தொடங்கியுள்ளதாகக் கடந்த ஜூன் மாதம் ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அரசு பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை என்பது போல் இந்து மக்கள் கட்சி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

முடிவு:
கீழடியைக் காட்டிலும் சாலவன்குப்பத்தில் கண்டெடுக்கப்பட்ட முருகன் கோவில் பழமையானது என இந்து மக்கள் கட்சி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தகவல் தவறானது. சாலவன்குப்பத்தை காட்டிலும் கீழடியே பழமையான வரலாற்றைக் கொண்டது.