யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வயநாடு நிலச்சரிவு சம்பவம் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு சடலங்களை மீட்கும்பணி தொடர்வதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம்
விரிவான விளக்கம்
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல மலைக் கிராமங்கள் உருக்குலைந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 250 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு சம்பவம் என்றுகூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் புகைப்படத்தில், மலையின் நடுப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு வீடுகளின் மேல் விழுந்து கிடப்பதை காணமுடிகிறது. இதனை பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி உட்பட பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வருவதையும் காணமுடிகிறது.
Heartbreaking! pic.twitter.com/buvnjVSgsX
— Amar Prasad Reddy (@amarprasadreddy) July 31, 2024
#WayanadLandslide
— We Dravidians (@WeDravidians) July 31, 2024
More than 50 houses were destroyed in the landslide that completely swept away the little town of Mundakkai. Heavy engineering equipment and rescue dog teams are being airlifted and disaster relief teams have been dispatched by the Indian Coast Guard to… pic.twitter.com/uuJDlRa9Wj
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இது வயநாடு நிலச்சரிவு சம்பவத்தோடு தொடர்புடைய புகைப்படம் அல்ல என்பதை அறியமுடிந்தது.
‘Alamy’ இணையதளப்பக்கத்தில், பரவி வரும் புகைப்படம், கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று எல் சால்வடார் (El Salvador) நாட்டில் அமைந்துள்ள சாண்டா டெக்லா (Santa Tecla) என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.

இதே போன்று ‘Newsroom’ இணையதளப் பக்கத்திலும், பரவி வரும் இதேப் புகைப்படம் குறிப்பிடப்பட்டு பதிவிடப்பட்டிருந்தது.
அதில், ஜனவரி 13, 2001 சனிக்கிழமை, எல் சால்வடார் முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்திய 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, எல் சால்வடார் (El Salvador) நாட்டில் அமைந்துள்ள சான்டா டெக்லா நகரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. சனிக்கிழமை நிலநடுக்கத்திற்குப் பிறகு சாண்டா டெக்லாவில் மட்டும் 1,200 பேர் காணவில்லை என்று செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்மூலம், வயநாடு நிலச்சரிவு என்றுகூறி பாலிமர் நியூஸ் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வரும் புகைப்படம், கடந்த 2001ஆம் ஆண்டில் எல் சால்வடார் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், வயநாடு நிலச்சரிவு என்று கூறி பாலிமர் நியூஸ் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வரும் புகைப்படம் தவறானது என்பதை அறியமுடிகிறது.
