யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இறந்தவரின் மனைவியிடம் பேட்டி கொடுக்கச் சொல்லி தொந்தரவு செய்தவர்களை சங்கி என்று குறிப்பிட்டதை திரித்து, கோயிலில் உயிரிழந்தவரை சங்கி என்று கூறுவதாக பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மார்ச் 16ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்ற 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்ற காரைக்குடியை சேர்ந்த ஓம்குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. திடீரென மயங்கி விழுந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கோயிலில் உயிரிழந்தவர் சங்கி என்று கூறியதாக செய்தி பரவி வருகின்றது.
"இறந்த அந்த நபர் சங்கி" என சொல்றான் இந்த அயோக்கிய பய.
ஹிந்துக்களை ஒழிப்பேன் என மாநாடு போட்ட சில்லறை எல்லாம் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனா இப்படி தான் நடக்கும் pic.twitter.com/4cVu1R97E5
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் இருக்கும் வார்த்தைகளில் வைத்து தேடி பார்த்தோம். அப்போது மார்ச் 18ஆம் தேதி கலைஞர் டிவி நியூஸ் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் டூப் போலீஸ் அண்ணாமலை : பங்கம் செய்த அமைச்சர் Sekar Babu என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பார்க்க முடிந்தது. அதில் சரியாக6:07 நிமிடத்தில் கோயிலில் உயிரிழந்த நபர் குறித்து அமைச்சர் விளக்கமளித்திருந்தார். அதில் ”அவரு லைன்ல நிக்கிறாரு. மூச்சு திணறல் ஏற்படுது. உடனடியாக திருக்கோயில் ஊழியர்கள், சிகிச்சைகாக அவரை திருக்கோயில் மருத்துவமனைக்கு எடுத்து செல்கிறார்கள். அவருக்கு ஏற்கனவே மூச்சு திணறல் பிரச்சினை இருப்பதாக அவரது மனைவி, குழந்தைகள் கூறியதன் அடிப்படையில், மருத்துவமனைக்கு எடுத்து செல்கிறார்கள். எதிர்பாராத விதமாக மரணம் ஏற்படுகிறது. அப்போது சங்கிகள் அங்கே வந்து ஒன்றுக்கூடி இப்படி பேட்டிக்குடு, அப்படி பேட்டிக்குடு என்று தொந்தரவு செய்திருக்கிறார்கள். அந்த அம்மாவின் பேட்டியை தற்போது ஊடகத்திற்கு ஷேர் செய்கிறேன்”என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து பரப்பப்பட்டு வரும் வீடியோவில் அமைச்சர் பேசும் வார்த்தைகளை தேடி பார்த்தோம். அதில் 7.03 நிமிடத்தில் வரும், ‘ஆகவே இது இயற்கையான மரணம்’ என்ற வார்த்தையையும், 6.06 நிமிடத்தில் வரும் வரும் ’அங்கயும் சங்கிங்க தான்’ என்ற வார்த்தையையும் வெட்டி ஒன்று சேர்த்து, உயிரிழந்த நபரை அமைச்சர் சங்கி என்று குறிப்பிட்டதாக பொய் செய்தி பரப்புகின்றனர்.
மேலும் அந்த பரப்பப்படும் செய்தியில் இந்து ஒழிப்பு மாநாடு நடத்திய இந்து அறநிலையத்துறை அமைச்சர் என்று குறிப்பிட்டிருந்தது. இது குறித்து தேடி பார்க்கையில், கடந்தாண்டு செப்டம்பர் 12ஆம் தேதி தினத்தந்தி நாளிதழின் இணையதள பக்கத்தில், சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி பா.ஜனதாவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இது குறித்து தேடி பார்க்கையில், அமைச்சர் சேகர் பாபு எந்தவிதமான இந்து ஒழிப்பு மாநாடும் நடத்தவில்லை என்பதும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்ததாண்டு செப்.2-ம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அவர் பங்கேற்றதும் தெரியவந்தது.
முடிவு :
திருச்செந்தூர் கோயிலில் உயிரிழந்தவரை சங்கி என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியதாக பரவும் செய்தி தவறானது.
