யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்து சமய அறநிலையத்துறையில் 70% பொறுப்புகளில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தான் என்று கூறி தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
இந்து சமய அறநிலையத்துறையில் 70% பொறுப்புகளில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தான் என்று தெரிய வந்திருக்கிறது.
விரிவான விளக்கம்
இந்து சமய அறநிலையத்துறையில் 70% பொறுப்புகளில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தான் என்று கூறி செய்திகள் பாஜகவினரால் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்படுகின்றன.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய, இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளபக்கத்தில் தேடினோம்.
ஆய்வு செய்ததில், தமிழ்நாட்டில் கோயில்கள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கான அரசுத்துறையை உருவாக்க, 01 ஜனவரி 1960 அன்று “தமிழ்நாடு இந்து சமய அறக்கொடைகள் சட்டம், 1959”, அமலுக்கு வந்தது என்பதை அறிய முடிந்தது.
இந்த “தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சட்டம் 1959, பிரிவு 10ன்” படி, இந்து சமய அறநிலையத்துறையில் பணி புரியும் ஆணையர், உதவி ஆணையர், பொறியாளர்கள் உட்பட பணியாளர்கள் அனைவருமே இந்து சமயத்தை சார்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும் அறிய முடிந்தது.
இதற்கான விளக்கத்தில், “இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அமர்த்தப்பட்ட ஆணையர், [கூடுதல் ஆணையர்] இணை அல்லது துணை அல்லது உதவி ஆணையர் ஒவ்வொருவரும், மற்றும் வேறு அலுவலர் அல்லது பணியாளர் ஒவ்வொருவரும், எவரால் அமர்த்தப்பட்டிருந்தாலும் இந்து சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொண்ட ஒருவராக இருத்தல் வேண்டும். மற்றும் அந்த சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டிருப்பதை விட்டுவிடும்போது அவ்வாறு பதவி வகிப்பதையும் விட்டுவிடுதல் வேண்டும்“ என்றும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் உண்மைத் தன்மையை அறியாமல் பலரும் சமூக ஊடகங்களில், இந்து சமய அறநிலையத்துறையில் 70% பொறுப்புகளில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தான் என்று கூறி தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
இதற்கு முன்பும், இந்து சமய அறநிலையத்துறை குறித்து பல செய்திகள் தவறாகப் பரவின. அது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை என வதந்தி பரப்பும் எச். ராஜா!
மேலும் படிக்க: 'தமிழ்நாட்டில் கோவில்களில் இருந்து பெறும் வரி, மசூதி, சர்ச்சுகளுக்கு வாரி வழங்கல்' எனப் பரவும் தவறான செய்தி!
முடிவு:
நம் தேடலில், இந்து சமய அறநிலையத்துறையில் 70% பொறுப்புகளில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தான் என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.