யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நடிகர் அஜித் குமாரை நேரில் அழைத்து கௌரவித்த பிரதமர் நரேந்திர மோடி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 28 அன்று நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில், நடிகர் அஜித் குமாரை நேரில் அழைத்து கௌரவித்த பிரதமர் நரேந்திர மோடி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
#PadmaBhushanAjithKumar#Thala 😍 விஷ்வ குருவுடன் தல 🇮🇳💥💥 pic.twitter.com/6o2deZ7kE6
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தில் நடிகர் அஜித் குமாரின் புகைப்படம் சரியாக பொருத்தாமல் இருந்ததால், அதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்தோம். தேடியதில், “Money Control” என்ற இணையதளப் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது.
அதில், பிரதமர் நரேந்திர மோடியுடன் உலக செஸ் சாம்பியனான குகேஷ் மற்றும் அவரது பெற்றோர் இருப்பதைக் காண முடிந்தது. மேலும் அதில், “சதுரங்க சாம்பியனும் இந்தியாவின் பெருமையுமான டி.குகேஷுடன் புதுதில்லியில் ஒரு சிறந்த உரையாடலைக் கொண்டிருந்தேன் என்று பிரதமர் குகேஷ் மற்றும் அவரது பெற்றோரைச் சந்தித்த பின்பு கூறினார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று, “CNBC-TV18” யூடியூப் பக்கத்திலும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலக செஸ் சாம்பியனான குகேஷ் ஆகியோரின் சந்திப்பு குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தன. இதில் உள்ள காட்சிகள் பரவி வரும் புகைப்படத்துடன் கச்சிதமாக பொருந்தின.
இதன் மூலம் உண்மையான புகைப்படத்தில், பிரதமர் மோடி, உலக செஸ் சாம்பியனான குகேஷ் மற்றும் அவரது பெற்றோருடனேயே இருப்பதை உறுதி செய்ய முடிகிறது. இதை எடிட் செய்து, நடிகர் அஜித் குமாருடன் பிரதமர் மோடி இருப்பது போல சமூக ஊடகங்களில் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

முடிவு:
நம் தேடலில், நடிகர் அஜித் குமாரை நேரில் அழைத்து கௌரவித்த பிரதமர் நரேந்திர மோடி என்று கூறி பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது.