யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) அமைப்பின் துணை தலைவரான P.M. அல்தாஃபி மறுமணம் செய்வது குறித்து பேசியுள்ளதை, பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
என்ன ஒரு ஆழமான கருத்து இதுமாதிரி யாரும் பேசி நான் பார்த்ததே இல்லை. ஒருத்தனுக்கு ஒரு மனைவியா ச்சைக் அபத்தம்..

விரிவான விளக்கம்
ஒருவனுக்கு ஒரு மனைவி இருப்பது குறித்து ஆவேசப்பட்டு பேசியுள்ள முஸ்லிம் தலைவரைப் பாருங்கள் என்று கூறி 1:05 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதனை பாஜகவினர் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காணமுடிகிறது.
ஆழமான கருத்து இதுமாதிரி யாரும் பேசி நான் பாத்ததே இல்லை...
— ZekeRavi Official🇮🇳 (@zeke_ravi) July 24, 2024
.
ஒருத்தனுக்கு ஒரு மனைவி, ஒருத்திக்கு ஒரு கணவன் ச்சை என்ன ஒரு அபத்தம்...
.
அப்றம் சார் உங்களுக்கு எத்தனை மனைவி ??? pic.twitter.com/fk05YRn1HF
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமெஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், பரவி வரும் வீடியோவின் முழுப்பகுதி ‘OnlineYMJ‘ யூடியூப் பக்கத்தில் “ஒற்றைப்படை இரவில் அல்தாஃபி ஆவேசம்“ என்று குறிப்பிட்டு கடந்த ஏப்ரல் 05 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
அதில், ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) என்ற அமைப்பின் துணைத்தலைவரான P.M. அல்தாஃபியிடம், வாசகர் ஒருவர், “என்னுடைய கணவர் இறந்துவிட்டார். அவர் இறந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். என் பிள்ளைகள் அதை ஏற்றுகொள்ளவில்லை. நான் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? கணவருக்கா அல்லது குழந்தைகளுக்கா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்து பேசியுள்ள அவர், “கணவர் இறந்துவிட்டார் என்றால் பிள்ளைகள்தான் இரண்டாவது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைக்க வேண்டும். அந்தப் பெண் மனுசி இல்லையா? மனசு இல்லையா? உணர்வு இல்லையா? பிள்ளைகள் நீங்கள் இருந்தால், அவர்களுடைய உணர்வுகளை ஓரமாக வைத்துவிடலாமா? மற்ற சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி மட்டும்தான் இருக்க வேண்டும் என்று தவறாக சொல்லி வைத்திருக்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பது உருப்படாத கலாச்சாரம். இந்த கலாச்சாரத்தால்தான் ஊருக்குள் விபச்சாரம் போன்ற தவறான செயல்கள் நடைபெறுகின்றன. உன்னுடைய தாய் இரண்டாவது திருமணம் செய்தால் உனக்கு ஏன் வலிக்கிறது? இவர்கள் கேடுகெட்ட பிள்ளைகள். இது போன்ற பலரை நான் பார்த்திருக்கிறேன்” என்று பேசியிருப்பார்.
இதன்மூலம் அவர் மறுமணம் குறித்துதான் பேசியுள்ளார் என்பதை தெளிவகாகக் கேட்க முடிகிறது. இந்நிலையில் அவர் மறுமணம் செய்வது குறித்து பேசியுள்ளதை, பலரும் சமூக ஊடகங்களில், ஒருவனுக்கு ஒரு மனைவி இருப்பது குறித்து ஆவேசப்பட்டு பேசியுள்ள முஸ்லிம் தலைவர் என்று குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், ஒருவனுக்கு ஒரு மனைவி இருப்பது குறித்து ஆவேசப்பட்டு பேசியுள்ள முஸ்லிம் தலைவர் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.