யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இடைநிற்றல் மாணவர்களைப் பள்ளிக்குக் கொண்டு வர அவர்கள் வீட்டின் முன்பாக அமித் என்ற ஆசிரியர் வகுப்பெடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படத்தைத் தமிழ் கற்பிக்கப்படுவதாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதி தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "புதிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்கச் சட்டத்தில் இடம் இல்லை என்றும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும்," என்றும் பதிலளித்தார்.
புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த ஒன்றிய அரசு முயல்வதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் முதற்கொண்டு அரசியல் கட்சியினர் வரை பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை மூலம் பிற மாநிலத்தவர்களும் தமிழ் மொழியை கற்றுக் கொள்வர் என பாஜக மற்றும் வலதுசாரிகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு வலு சேர்க்கும் வகையில் ரங்கராஜ் பாண்டேவின் ’சாணக்கியா’ நியூஸ் கார்டு ஒன்று வெளியிட்டுள்ளது. இதனை பாஜக-வை சேர்ந்த H.ராஜாவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நன்கு கவனிக்க. இது தான் தேசிய கல்விக் கொள்கை pic.twitter.com/mTEE3XlVqq
‘தமிழ் படிக்கும் உ.பி மாணவர்கள்’ எனத் தலைப்பிட்ட அந்த நியூஸ் கார்டில், ”உத்தர பிரதேசத்தில் சென்ற ஆண்டு புதிய தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்ட நிலையில், அங்குள்ள பள்ளிகளில் தாய்மொழி ஹிந்தி மற்றும் ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக தமிழ், தெலுகு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகள் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான அலுவல் மொழிகளும் சேர்ப்பு” என்றுள்ளது.
உண்மை என்ன?
மும்மொழிக் கொள்கை மூலம் பிற மாநிலத்தில் உள்ள மாணவர்கள் தமிழை ஒரு மொழிப் பாடமாக எடுத்துப் படிக்க முடியும். ஆனால், இதற்கு முன்னர் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் முறையாக தமிழ் கற்பிக்கப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
அப்படி தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் ஆசிரியர்களே இல்லை என்பதை ஆர்.டி.ஐ. தகவலுடன் 2021-ல் யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதுதான் எதார்த்தமான உண்மை. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பள்ளிகளிலேயே இந்த நிலைமை என்றால், உத்தரப் பிரதேசத்தில் எப்படி தமிழ் கற்றுத்தருகிறார்கள் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் சாணக்கியா வெளியிட்ட நியூஸ் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் செய்தி குறித்து ஆராய்ந்தோம்.
நியூஸ் கார்டில் உள்ள அதே இடத்தில் எடுக்கப்பட்ட வேறொரு புகைப்படத்துடன் 2023, செப்டம்பர் மாதம் ‘New Indian Express’ ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், உத்தரப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும் யூடியூப் பக்கத்திலும் இது குறித்த செய்தி வீடியோவுடன் பதிவிடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஜான்சி மாவட்டம், லகாரா கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள் நீண்ட நாட்களாகப் பள்ளிக்கு வராததால், அவர்களின் பெற்றோரைச் சந்தித்து அமித் என்ற ஆசிரியர் பேசியுள்ளார். குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதால் பள்ளிக்கு அனுப்ப முடியாது எனப் பெற்றோர் தெரிவித்த நிலையில், ஆசிரியர் அமித் பலமுறை முயன்றும் அக்குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வர முடியவில்லை.
எனவே, அக்குழந்தைகளின் வீட்டிற்கு முன்பாக மற்ற மாணவர்களை அழைத்துச் சென்று அங்கேயே வகுப்பெடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அப்பெற்றோர் தங்களின் தவற்றை உணர்ந்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பச் சம்மதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ ஊடகத்திலும் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் எந்த இடத்திலும் தமிழ் கற்றுத்தரவில்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது. இதிலிருந்து சாணக்கியா வெளியிட்டது பொய் செய்தி என்பது தெரிய வருகிறது.

சாணக்கியா வெளியிட்ட இந்த பொய் செய்தியைக் கொண்டு, ‘Hindu post’ என்ற வலதுசாரி இணையதளமும் செய்தி வெளியிட்டுள்ளது. இப்படி மாற்றி மாற்றி ஒரு பொய் செய்தியை உண்மை போல் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முயற்சி செய்கின்றனர்.
முடிவு:
புதிய கல்விக் கொள்கையை ஏற்றதால் உத்தரப் பிரதேசத்தில் மூன்றாவது மொழியாகத் தமிழ் கற்றுத்தரப்படுகிறது எனச் சாணக்கியா வெளியிட்ட செய்தி பொய்யானது. இடைநிற்றல் மாணவர்களைப் பள்ளிக்குக் கொண்டு வர அவர்கள் வீட்டின் முன்பாக அமித் என்ற ஆசிரியர் வகுப்பெடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படத்தைத் தமிழ் கற்பிக்கப்படுவதாகப் பொய்யான தகவலைச் சாணக்கியா செய்தியாக வெளியிட்டுள்ளது.
