
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்ட மேற்படிப்பு, பட்டய மேற்படிப்புக்கு சுமார் 23,000க்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இத்தகைய இடங்கள் அனைத்தும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் மூலம் நிரப்பப்படுகின்றன...
பரவிய செய்தி
மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்காக நடைபெற்ற நீட் தேர்விற்கு தாலி அணிந்து வந்த பெண் டாக்டர்களைத் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மறுத்ததால் தாலியைக் கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றனர்.
விரிவான விளக்கம்
இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்ட மேற்படிப்பு, பட்டய மேற்படிப்புக்கு சுமார் 23,000க்கும் அதிகமான இடங்கள் உள்ளன.
இத்தகைய இடங்கள் அனைத்தும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த நீட் தேர்விற்கு நாடு முழுவதும் எம்பிபிஎஸ் முடித்து விட்டு பணியாற்றி வரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், ஜனவரி 7-ம் தேதி சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடுமுழுவதும் 120க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் டாக்டர்கள் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வு எழுத வருபவர்கள் செல்போன், நோட்புக், பேனா, கைப்பை என்று எதையும் எடுத்து வரக் கூடாது. மேலும், வாட்ச், பிரேஸ்லெட், கம்மல், செயின், பெல்ட் போன்றவற்றையும் அணிந்து வரக் கூடாது என்ற கடுமையாக கட்டுப்பாடுகளை தேசிய தேர்வுகள் வாரியம் விதித்திருந்தது.

இந்நிலையில், மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்காக நடைபெற்ற நீட் தேர்விற்கு தாலி அணிந்து வந்த பெண் டாக்டருக்கு தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வு கண்காணிப்பாளர் அனுமதிக்க மறுத்ததால், பெண் டாக்டர் தாலியைக் கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றுள்ளார். இதேபோல் பல்வேறு தேர்வு மையங்களிலும் பெண் டாக்டர்கள் தாலியைக் கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதியதாகக் கூறப்படுகிறது.

விபுசன் ஜாதவை சந்திக்கச் சென்ற அவரது மனைவியை தாலி மற்றும் பொட்டு உள்ளிட்டவற்றை அகற்றுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியதற்கு நாடாளுமன்றத்தில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், சொந்த நாட்டில் தேர்விற்கு செல்லும் பெண்களிடம் மட்டும் தாலி, மெட்டி போன்ற உணர்வு சார்ந்த பொருட்களை நீக்கச் சொல்வது ஏன் என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர். இத்தகைய அதீத கெடுபிடிகளால் தேர்வு எழுதிய பலரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோபிநாத் கூறிகையில், “கடந்தாண்டு நடைபெற்ற மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வின் போது தாலியுடன் வந்த பெண் டாக்டர்களை அனுமதிக்க மறுத்ததால், அவர்கள் தாலியைக் கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதினர். இது குறித்து தேசிய தேர்வுகள் வாரியத்திடம் புகார் அளித்ததற்கு இனி இதுபோன்ற சம்பவம் நடக்காது என்று உறுதி அளித்தனர். ஆனால், இம்முறையும் அதே போல் நிகழ்ந்தது கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது அதிருப்தியையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.
சுருக்கமாக
மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்காக நடந்த நீட் தேர்வு மையங்களில் தங்கம் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பெண் டாக்டர்கள் தாலியைக் கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதியச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.