
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டைச் சேர்ந்த ரகுராம் ராஜன் 2013 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவியேற்றார். சிறந்த பொருளாதார வல்லுனரான ரகுராம் ராஜன் முன்பு இருந்த ரிசர்வ் வங்கி கவர்னர்கள் போல் அல்லாமல் வெளிப்படையான கருத்துகளைக் கூறுபவர். இதனால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் அவருக்கும் இடையே பல...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ரகுராம் ராஜன் 2013 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவியேற்றார். சிறந்த பொருளாதார வல்லுனரான ரகுராம் ராஜன் முன்பு இருந்த ரிசர்வ் வங்கி கவர்னர்கள் போல் அல்லாமல் வெளிப்படையான கருத்துகளைக் கூறுபவர். இதனால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் அவருக்கும் இடையே பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், 2016-ம் ஆண்டு அவருடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக 2-வது முறையாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் நியமிக்கப்படுவாரா என்று கேள்விகள் எழுந்தன. ஆனால், அரசு தரப்பில் இருந்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து ரகுராம் ராஜன் தனது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு சிகாகோ பல்கலைகழகத்தில் நிதித்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த வருடம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பில் ரகுராம் ராஜனின் பங்களிப்புஇருக்கலாம் என்று கேள்விகள் எழுந்தன. ஆனால், அதை மறுக்கும் விதமாக ரகுராம் ராஜன் எழுதிய “ ஐ டூ வாட் ஐ டூ “ என்ற புத்தகத்தில் பணமதிப்பிலக்கம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதில் ரூபாய் நோட்டை தடைச் செய்வதை நான் ஆதரிக்கவில்லை. இதனால் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று எச்சரித்ததாகவும் கூறியுள்ளார். அவருடைய இந்த விமர்சனம் பெரும் கவனத்தை ஈர்த்தது.
அமெரிக்க மத்திய வங்கிகளுக்கான முதன்மை அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஜேனட் யெல்லென். அவருடைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் தலைவர் பதவிக்கான பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், உலக பைனான்சியல் பத்திரிக்கையான பரோன்ஸ் தன்னுடைய கட்டுரையில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் தலைவர் பதவிக்கு ரகுராம் ராஜன் சிறந்த வேட்பாளர் என்று குறிப்பிட்டு உள்ளது. “ உலகில் உள்ள சிறந்த திறன் உடையவர்களை விளையாட்டு அணிகளுக்கு பணி அமர்த்துவது போன்று, அரசின் தலைமை வங்கிகளுக்கும் பணியமர்த்தலாம் என்று கூறியுள்ளது. சிறந்த பொருளாதார வல்லுனரான ரகுராம் ராஜனின் பெயரானது இவ்வருடத்தின் சிறந்த பொருளாதாரத்திற்கான நோபல்பரிசு பட்டியலில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.