மே.வ பாஜக பெண்கள் கூட்டு வன்புணர்வு எனப் பரவும் தகவல் உண்மையில்லை : போலீஸ் விளக்கம் !

" தேர்தலுக்கு பிறகு 14 அரசியல் கொலைகள் நடந்து உள்ளதாகவும், அனைத்து கட்சிகளும் தங்களின் கட்சி உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறுகிறன்றன. தங்கள் கட்சியில் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக பாஜக கட்சி கூறி வருகிறது. ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 3 பேர் இறந்துள்ளதாகவும், சிபிஎம் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகியவையும் தங்களது கட்சியினரை இழந்து உள்ளதாக கூறுகின்றன " என தி பிரிண்ட் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்களால் பாஜக கட்சியின் அலுவலகம், சொத்துக்கள் சூறையாடப்பட்டதாக புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும், பாஜகவைச் சேர்ந்த இரு பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டதாக பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், மேற்கு வங்க காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " பீர்பம் பகுதியில் பாஜக தேர்தல் பெண் முகவர்கள் இருவர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதாகவும், பல பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக பகிரப்பட்ட ஸ்க்ரீன்ஷார்டை போலியானது " எனப் பதிவிட்டு இருக்கிறது.
#FakeNewsAlert pic.twitter.com/gSAYkNPGb2
— West Bengal Police (@WBPolice) May 4, 2021
Twitter archive link
" சமூக ஊடகங்களில் வைரலாகியதால் சம்பவம் நடந்ததா என அறிய உடனடியாக விசாரணை தொடங்கினோம். சம்பவம் ஏதும் நடந்ததா என்பதை அறிய நானூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் தாரகேஸ்வர் சஹா மற்றும் அப்பகுதியில் உள்ள பலருடன் பேசினோம். இறுதியில், இது போலியான செய்தி என்பதை நாங்கள் அறிந்தோம். அந்த பகுதியில் வன்முறை மற்றும் அமைதியின்மையைப் பரப்பும் நோக்கத்துடன் செய்யப்பட்டது " என பீர்பம் காவல்துறை அதிகாரி நாகேந்திர நாத் திரிபாதி கூறியதாக டெலிகிராஃப் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.
" பாலியல் வன்புணர்வு அல்லது கூட்டு வன்புணர்வு போன்ற சம்பவங்கள் ஏதும் மாவட்டத்தில் எங்கும் நிகழவில்லை. இந்த செய்தியை உருவாக்கியவர்கள், பரப்பியவர்கள் யார் என்பதை கண்டறிந்து வழக்கு பதிவு செய்ய உள்ளதாக " அம்மாவட்ட எஸ்.பி தெரிவித்ததாகவும் வெளியாகி இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் எழுந்த வன்முறைக்கு எதிராக மே 5-ம் தேதி தேசிய அளவிலான தர்ணாவை நடத்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்து இருந்தார். இன்று தமிழக பாஜக சார்பில் தர்ணா நடைபெற்றது.

Facebook link
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தன் ட்விட்டர் பக்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களால் பாஜக பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதாக தலை மூடப்பட்ட நிலையில் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். ஆனால், இப்புகைப்படம் குறித்த தகவல் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செய்திகளிலும் வெளியாகவில்லை.
சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக மேற்கு வங்க கலவரம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பதிவுகளை கங்கனா பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார். ட்விட்டர் விதிமுறையை மீறியதாக கங்கனாவின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டது. இது இந்திய அளவில் பேசு பொருளானது. எனினும், அவர் முகநூலில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த அரசியல் கொலைகள், தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் வைரல் செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றின் உண்மைத்தன்மை அறியப்படுவதில்லை. பழைய வீடியோக்கள், புகைப்படங்கள், பொய் செய்திகளும் பரவுகின்றன என்பதை புரிந்து பார்க்கும் செய்திகளின் உண்மைத்தன்மை அறியாமல் பகிர வேண்டாம்.
Links :
BJP’s ‘gang rape’ charge false: Cops
’14 killed’ in Bengal as houses, party offices are torched, Governor says spoke to CM & PM