கழுத்தில் அலகு குத்திய பக்தரின் வைரல் வீடியோ|நாடகமா ? வேண்டுதலா ?
தமிழகத்தில் முருகன், அம்மன் உள்ளிட்ட கடவுள்களின் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு, நேர்த்திக்கடனுக்காக உடல்களில் அலகு குத்தி கோவில்களில் வலம் வருவது ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. மக்கள் தாங்கள் கொண்ட நம்பிக்கையால் அலகு குத்தி வேண்டுதலைத் தொடர்கிறனர்...

இந்நிலையில், கழுத்தில் நீளமான கத்தியை ஒருபக்கம் குத்தி, மறுபக்கம் வர வைத்து இருப்பது போன்று ஒருவர் அலகு குத்தி இருப்பதாக காணப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கழுத்தில் கத்தியுடன் மாலைகள் அணிந்து, கண்ணில் கண்ணாடியுடன் சாய்ந்து இருப்பவரை அங்கிருப்பவர்கள் தாங்கி பிடித்து உள்ளனர். இப்படி அலகு குத்தியதாக பகிரப்படும் நபரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, கழுத்து பக்கமாக வளைந்து வரும் கத்தியை வைத்து அதன் மீது மாலையை அணிவித்து மறைத்து, கடவுள் பெயரைக் கூறி மக்களை முட்டாளாக்க பொய்யான காரியத்தை அரங்கேற்றி வருவதாகவும் சிலர் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையில் கழுத்தில் அலகினை ஒருபக்கம் குத்தி, மறுபக்கம் கொண்டு வர வாய்ப்பில்லை, அப்படி செய்திருந்தால் அவரின் உயிரே பறிபோகி இருந்திருக்கக்கூடும். அதுமட்டுமின்றி, அவரின் உடலில் அசைவுகள் இருப்பதால் உயிருடன் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
பார்க்கவே பயமா இருக்கு
கடவுள் எப்படா இப்படி எல்லாம்
வேண்டுதல் பன்ன சொல்லிச்சி
அறிவு கெட்டவங்களா...😯😯😯 pic.twitter.com/QPnwc9IAgV
— மஹி☆Mage (@mage_arr) July 28, 2019
கழுத்தில் கத்தி குத்தி இருப்பது போன்று இருப்பவரின் வீடியோவை ட்விட்டரில் மஹி என்பவர் ஜூலை 28-ம் தேதி ட்விட்டரில், " பார்க்கவே பயமா இருக்கு கடவுள் எப்படா இப்படி எல்லாம் வேண்டுதல் பன்ன சொல்லிச்சி அறிவு கெட்டவங்களா..." எனப் பதிவிட்டு இருக்கிறார்.
எனினும் சில பதிவுகளில் கூறும்படி மக்களை முட்டாளாக்க செய்யும் மாய வித்தை என்றும் கூறிவிட முடியாது. ஏனெனில், அது வகையான நாடகமாகும்.
நாடகம் போல அலவு குதிவரும் போது,இவர் இறந்தது போல ஒப்பாரி பாடல் சொல்லி அழுதுவருவர். ஒருவகை வேடம் அணிந்து வணங்கும் வழிபாடு. சிறு வயதில் நானும் பாத்து பயந்தேன். அடுத்த வருடம் அருகில் இருந்து அலங்காரம் செய்யும்போது பார்த்ததால் புரிந்தது.
— schindler (@avva_awa) July 28, 2019
ட்விட்டரில் Schindler என்பவர், " நாடகம் போல அலவு குதிவரும் போது, இவர் இறந்தது போல ஒப்பாரி பாடல் சொல்லி அழுதுவருவர். ஒருவகை வேடம் அணிந்து வணங்கும் வழிபாடு. சிறு வயதில் நானும் பாத்து பயந்தேன். அடுத்த வருடம் அருகில் இருந்து அலங்காரம் செய்யும்போது பார்த்ததால் புரிந்தது " என பதிவிட்டு இருக்கிறார்.

வைரலாகும் வீடியோவில் ஒப்பாரி வைக்கும் பாடல் ஒலிக்கிறது, அந்த நபருக்கு பின்னால் வேடமணிந்த நாடகக் கலைஞர் இருப்பதையும் காண முடிகிறது. மேலும், கழுத்து பகுதியிலும் இரத்த நிறத்தில் பூசப்பட்டு இருப்பதை காணலாம். ஆக, வேடம் அணிந்து வணங்கும் ஒருவகையான வழிபாடு அல்லது நாடகம் என அறிந்து கொள்ள முடிகிறது.
வைரலாகும் புகைப்படங்கள், வீடியோ தமிழகத்தின் எந்த பகுதியைச் சேர்ந்தது என்ற விவரங்கள் கிடைக்கவில்லை. நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, வேண்டுதலுக்காகவோ அல்லது மக்களை முட்டாளாக்கவோ அவ்வாறு செய்யவில்லை என அறிந்து கொள்ள முடிகிறது.