YouTurn

தமிழக அரசியலில் வரிசைக்கட்டி பரப்பப்படும் போலி நியூஸ் கார்டுகள் !

தமிழக அரசியலில் வரிசைக்கட்டி பரப்பப்படும் போலி நியூஸ் கார்டுகள் !
முன்னணி செய்தி ஊடகங்கள் வெளியிடும் நியூஸ் கார்டுகளில் போலியான செய்தியை எடிட் செய்து வதந்தியையும், அரசியல் களத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தும் தவறான செயல்கள் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

ஊடகங்களுமே தங்கள் பெயரில் பரவும் போலிச் செய்திகளை நிராகரித்து பதிவிடுவது அதிகரித்து வருகிறது. அந்தளவிற்கு போலியான நியூஸ் கார்டுகளை அரசியல் கட்சி ஆதரவாளர்கள் அதிகம் பரப்பி வருகின்றனர். சமீபத்தில் தினந்தோறும் போலியாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதை நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். தற்போது பரவி வரும் போலி நியூஸ் கார்டுகள் குறித்து ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

1.கார்த்திக் சிதம்பரம் 



Twitter link

" குடியரசு தின அலங்கார ஊர்தியில் தமிழக அரசு சார்பாக அனுப்பப்பட்ட வாகனத்தில் கருணாநிதி மற்றும் அவரின் இணைவியார் ராசத்தியம்மாள் சிலை வைக்கப்பட்டதால் தமிழக அலங்கார வாகனம் நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வந்துள்ளது இதனை திமுக அரசு தவிர்த்திருக்கலாம் " என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க : தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்தி மாதிரியில் கருணாநிதியின் உருவம் இடம்பெற்றதா ? 

தமிழ்நாடு சார்பில் உருவாக்கப்பட்ட குடியரசு தின அலங்கார ஊர்தியின் மாதிரியில் கருணாநிதியின் உருவம் இருப்பதாக பரவும் புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். இந்த விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கருத்துக் கூறியதாக தற்போது பரவி வரும் நியூஸ் கார்டும் போலியானது. அது போலியானது என தந்தி டிவி செய்தியும் பதிவிட்டு உள்ளது.

2.அன்பில் மகேஷ் :



Facebook link 

" ஆசிரியர்கள் மீது அமைச்சர் காட்டம். தற்போதைக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியமே போதுமானதாக உள்ளது. அதனால் தொகுப்பு ஊதியம் நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை வழங்கப்படாது. தேவைப்பட்டால் கொரோனா காலத்தில் மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் பணியில் ஆசிரியர்களை பயன்படுத்துவோம் " என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால், இது போலியாக எடிட் செய்யப்பட்டது. தந்தி டிவி சேனலில் இப்படியொரு செய்தியே வெளியாகவில்லை. இது போலி நியூஸ் கார்டு என தந்தி டிவி சேனலும் பதிவிட்டு இருக்கிறது.

3.எச்.ராஜா :



Twitter link 

" குடியரசு தின விழா ஊர்தியில் வீர சாவர்க்கர் மாதிரி தியாகிகளை போற்றாமல் யாருக்குமே தெரியாத வேலு நாச்சியரை ஊர்தியில் இடம் பெற்றதால் நிராகரிக்கப்பட்டது " என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாக விகடன் நியூஸ் கார்டு சுற்றி வருகிறது.

மேற்காணும் குறித்து ஜூனியர் விகடன் முகநூல் பக்கத்தில் ஆராய்கையில், அவ்வாறு எந்த செய்தியும் வெளியாகவில்லை. மேலும், பரப்பப்படும் நியூஸ் கார்டில் எழுத்துப்பிழை மற்றும் தேதி இடம்பெறாமல் இருக்கிறது. ஆக, இது போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

4.எடப்பாடி பழனிசாமி :



Facebook link 

" திறமையில்லாதவர் ஸ்டாலின் - ஈபிஎஸ். குடியரசு தின பேரணிக்கு தமிழக ஊர்திகள் தேர்வு செய்யப்படாததிற்கு ஸ்டாலினின் திறமையின்மையே காரணம். நானாக இருந்தால் அமித்ஷா அவர்களின் காலில் விழுந்தாதவது தேர்வு செய்ய வைத்திருப்பேன் " என எடப்பாடி பழனிசாமி பேசியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று ட்ரோல் செய்து பரப்பப்பட்டது.

ஆனால், இதுவும் போலியாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டே. இதை நாங்கள் வெளியிடவில்லை என தந்தி டிவி சேனலும் மறுத்து பதிவிட்டு உள்ளது.

5.சி.டி.ஆர்.நிர்மல் குமார் : 



 

" தமிழர்களுக்கு தேசபக்தி இல்லை - நிர்மல் குமார் அதிரடி. வட மாநில மக்கள் மட்டுமே தேசபக்தி உடையவர்கள். தென்னிந்திய மக்களுக்கு அதிலும் குறிப்பாக தமிழக மக்களுக்கு தேசபக்தி இல்லை. தமிழர்களால் தேச நலனுக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாஜக சமூக ஊடக அணித் தலைவர் நிர்மல் " என நியூஸ் கார்டு ஒன்று பரவி வருகிறது.

இதுகுறித்து தந்தி டிவி சேனலின் முகநூல் பக்கத்தை ஆராய்கையில் அவ்வாறு எந்த செய்தியும் இடம்பெறவில்லை. இதுகுறித்து, நிர்மல் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில், " சமூக ஊடகப் பிரிவு" திமுகவில் தான் "அணி", அடுத்த போலி கார்டு போடும் போது நினைவில் கொள்ளவும் " என பரவும் செய்தி போலியானது என பதிவிட்டு இருக்கிறார்.

6.டி.ஆர்.பாலு :



Twitter link 

" பாஜகவுக்கு டிஆர் பாலு புகழாரம். காங்கிரஸ் அரசு பல நேரங்களில் எங்களை இரண்டாம் தரமாக நடத்தியது இத்தனைக்கும் எங்கள் தயவில் தான் அவர்கள் ஆட்சியே நடந்தது. ஆனால் எதிரியாக இருந்தாலும் எங்களுக்கு பிரியமான பாஜக அரசு எங்களை மரியாதையோடு நடத்துகிறார்கள் " என திமுக பொருளாளர் டிஆர். பாலு கூறியதாக நியூஸ் கார்டு பரவி வருகிறது.

நீட் ரத்து விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சந்தித்து பேசிய பிறகு இப்படியொரு செய்தியை பரப்பி இருக்கிறார்கள். ஆனால், டி.ஆர்.பாலு இப்படி பேசியதாக செய்தி ஏதும் வெளியாகவில்லை. பரப்பப்படும் இந்த நியூஸ் கார்டு போலியானது என தந்தி டிவி மறுத்துள்ளது.

மேலும் படிக்க : ஆவின் மூலம் கோமியத்தை விற்பனை செய்யுமாறு அர்ஜுன் சம்பத் கூறினாரா ?

மேலும் படிக்க : சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழர்கள் பற்றி அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

இப்படி காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, விசிக என ஒவ்வொரு கட்சிக்கும், அரசியல் கட்சித் தலைவருக்கும் எதிராக போலியாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டுகளைத் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க : பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அமைச்சர் சக்கரபாணி கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !

மேலும் படிக்க : தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என திருமாவளவன் கூறினாரா ?

ஊடக நிறுவனங்களின் பெயரில் போலியாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டுகள் அதிகம் உருவாக்கப்படுவதால் சமூக வலைதளங்களில் பார்க்கும் செய்திகள் உண்மையா என அறிந்து பகிருங்கள்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை