தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் இடை நிற்றல் பிரச்சனை அல்ல! வேறென்ன பிரச்சனை?
இடை நிற்றல் விகிதத்தில் மாநிலங்களைவிட தமிழ்நாடு சிறப்பாக இருந்தாலும் அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் தான் இன்னும் உள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் படி, 2023-24 கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வி அளவில் மாணவர்களின் இடை நிற்றல் குறைந்துள்ளது. அதேவேளையில், பள்ளிக் கல்வியில் மாணவர்களின் சேர்க்கையும் குறைந்துள்ளது.
அடிப்படைக் கல்வி (Preparatory), இடைநிலைக் கல்வி (Middle) , உயர்நிலை கல்வி (Secondary) என அனைத்து மட்டங்களிலும் மாணவர்கள் சேர்க்கை விகிதம் என்று சொல்லப்படக்கூடிய Gross Enrolment Ratio (GER) சரிந்திருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
2023-24 கல்வி ஆண்டில் இடைநிலைக் கல்வி அளவில், பீகார் மாநிலத்தில் 25.95 சதவீதமும், மேகாலயா மாநிலத்தில் 12.41 சதவீதமும் இடைநிற்றல் விகதம் இருக்கிறது.
மேலும், உயர்நிலை கல்வி அளவில், பீகார், அசாம், மேகாலயா, குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இடை நிற்றல் விகிதம் இருக்கிறது. இது அந்த மாநிலங்களில் பள்ளிக்கல்வித் துறை பின்தங்கி இருப்பதைக் காட்டுவதாக இருக்கிறது.
அதேவேளையில், தமிழ்நாட்டில் இடைநிலை பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் பூஜ்யம் சதவிகிதமாகவும், உயர்நிலை பள்ளிகளின் மாணவர் இடைநிற்றல் 5.45 சதவிகிதமாகவும் இருக்கிறது. கேரள மாநிலத்தில் உயர்நிலைக் கல்வி இடைநிற்றல் விகிதம் வெறும் 2.18 சதவீதமாகவே இருக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் பள்ளிகள் இருக்கவில்லை என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கொரோனா தொற்றுக்கு பிறகான 2021 - 2022 கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை பொதுவாக குறைந்த போதிலும், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கனிசமாக அதிகரித்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறைய குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டன. இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட முடியாத சூழல் ஏற்பட்டு பலர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர்.
ஆனால், தமிழகத்தின் அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பில் பல குறைபாடுகள் இருப்பதாக Comptroller and Auditor General (CAG) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. 108 பள்ளிகளை மாதிரியாக எடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், 48 பள்ளிகளில் 44 சதவீத வகுப்பறை பற்றாக்குறை இருப்பதாக தெரியவந்தது. அதாவது, 100 வகுப்பறைகள் இருக்கவேண்டிய பள்ளியில் 56 வகுப்பறைகள் மட்டுமே இருக்கிறது என்று பொருள். இதனால் மாணவர்களுக்கான வகுப்புகள் திறந்தவெளியில், மரத்தடியில், பள்ளியின் ஆய்வக கட்டிடங்களில் நடத்தப்படுகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கனிசமானவற்றில் விளையாட்டு மைதானங்கள் இல்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

2023 ஏப்ரல் மாதத்தில் 'The New Indian Express' வெளியிட்டுள்ள செய்தி, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 18,862 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும், ஆனால் உண்மையில் தேவைப்படும் ஆசிரியர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. 1000-துக்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக ‘South First’ செய்தித்தளம் வெளியிட்டுள்ளது கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
கடைசியாக 2022-23 ஆண்டில் வெறும் 3,043 உயர்நிலை பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன.

சென்னை போன்ற முதன்மை பெரு நகரத்தில் உள்ள பல அரசு பள்ளிகளில் சரியான கழிவறை வசதிகள் இல்லாமல், 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பாழடைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள், போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது என்று பல பிரச்சினைகள் உள்ளது. இவையெல்லாம் மாணவர்களின் கல்வித் தரத்தை வெகுவாக பாதிக்கக்கூடியவை.
இடை நிற்றல் விகிதத்தில் தமிழ்நாடு பீகார், குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களைவிட சிறப்பாக இருந்தாலும் அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் தான் இன்னும் உள்ளது.