YouTurn

ராகுல் காந்தியின் "ரேப் இன் இந்தியா" பேச்சு| ஸ்மிரிதி இராணி & ஹெச்.ராஜா குற்றச்சாட்டு ?

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு நாடு முழுவதிலும் அரசியல் சார்ந்த சர்ச்சைகள் எழத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, டிசம்பர் 12-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத் தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் நாட்டில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ராகுல் காந்தி பேசினார்...

ராகுல் காந்தியின் "ரேப் இன் இந்தியா" பேச்சு| ஸ்மிரிதி இராணி & ஹெச்.ராஜா குற்றச்சாட்டு ?
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு  நாடு முழுவதிலும் அரசியல் சார்ந்த சர்ச்சைகள் எழத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, டிசம்பர் 12-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத் தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் நாட்டில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ராகுல் காந்தி பேசினார். அதில், மேக் இன் இந்தியாவை , ரேப் இன் இந்தியா என விமர்சித்ததாக செய்தி தலைப்புகள் வெளியாகத் தொடங்கின.



Facebook link | archived link

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உடைய முகநூல் பக்கத்தில், " இந்தியாவை ரேப்பிஸ்ட் கேபிடல் என்றும். மேக் இன் இந்தியா வை ரேப் இன் இந்தியா என்றும் பேசிய ராகுல் காந்தியின் அநாகரிகமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் " எனப் பதிவிட்டு இருந்தார். ரேப் இன் இந்தியா எனக் கூறியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.



Twitter link | archived link

ராகுல் காந்தியின் பேச்சிற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி நாடாளுமன்றத்தில் கண்டனத்தை எழுப்பி இருந்தார். அதில், " இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு தலைவரே இந்தியப் பெண்களை வன்கொடுமை செய்யுங்கள் என வெளிப்படையாகக் கூறுகிறார். இதுதான் நாட்டு மக்களுக்கு அவர் விடுக்கும் செய்தியா ? அவர் தண்டிக்கப்பட வேண்டும் " எனக் கூறி இருந்தார். அவரின் முழு பேச்சு இங்கே :



Youtube link | archived link

ராகுல் காந்தி குறித்து ஸ்மிரிதி இராணி பேசிய பேச்சு செய்தி ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின. ஆனால், மத்திய அமைச்சர் கூறியது போன்று ராகுல் காந்தி இந்தியாவில் உள்ள பெண்களை வன்கொடுமை செய்ய மக்களிடம் அழைப்பு விடுத்தார் என கூறும் குற்றச்சாட்டு தவறானது.

ராகுல் காந்தி கூறியது : 



Twitter link | archived link

கோடா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, " நரேந்திர மோடி "மேக் இன் இந்தியா" குறித்து பேசுகிறார். ஆனால் , இன்றைய நாட்களில் நீங்கள் பார்ப்பது " ரேப் இன் இந்தியா " . செய்தித்தாள்களை திறந்தால் , ஜார்கண்டில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தை பார்த்தால், நரேந்திர மோடியின் எம்எல்ஏ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கிறார் மற்றும் அந்த பெண்ணின் கார் விபத்துக்குள்ளாகிறது , ஆனால் நரேந்திர மோடி எந்தவொரு வார்த்தையும் பேசுவதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் , ஒவ்வொரு நாளும் , இந்தியாவில் பலாத்காரம் நிகழ்கிறது. " பெண்களை படிக்க வைப்போம் : பாதுகாப்போம் " என நரேந்திர மோடி கூறினார் . ஆனால் யாரிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என மோடிஜி கூறவில்லை ? பாஜக எம்எல்ஏக்களிடம் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் " என பேசியுள்ள வீடியோவை ANI நியூஸ் ஏஜென்சி வெளியிட்டு உள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி கூறுவது போன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய அழைப்பு விடுக்கவில்லை. அவரின் " மேக் இன் இந்தியா - ரேப் இன் இந்தியா " கருத்தானது நாட்டில் நிகழும் பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மேற்கோள்காட்டி மோடி அரசை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருவதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, " நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை.... நான் என்ன கூறினேன் என்பதை தெளிவுபடுத்துகிறேன். பிரதமர் "மேக் இன் இந்தியா " குறித்து பேசுகிறார் என நான் கூறினேன். எனவே செய்தித்தாள்களை திறந்தால் நாட்டில் நடக்கும் பாலியல் பலாத்காரங்களைப் பற்றிதான் வாசிக்க வேண்டியுள்ளது என்றே கூறினேன். இதை திரித்து முக்கிய பிரச்சனையை திசை திரும்ப முயல்கிறார்கள் " எனக் கூறி இருந்தார்.



"நரேந்திர மோடி டெல்லியை ரேப் கேபிட்டல் எனக் கூறிய வீடியோ தன்னிடம் உள்ளது, அதை ட்வீட் செய்கிறேன் அனைவரும் பாருங்கள்.வடகிழக்கு பகுதியில் நிகழும் போராட்டங்களின் மீதான கவனத்தை திசை திருப்பவே இதை பாஜக பிரச்சனையாக்கி வருவதாக " ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.



Twitter link | article link

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், " வடகிழக்கு பகுதியை எரியச் செய்து கொண்டிருப்பதற்கும் , இந்தியப் பொருளாதாரத்தை சிதைத்ததற்கும் , இந்த பேச்சுக்கும் மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் " எனப் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ 2014 பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசப்பட்ட வீடியோ.

தன் பேச்சினை திரித்து முக்கிய பிரச்சனையை திசை திருப்பவே ஆளும் பாஜக முயற்சித்து வருவதாக ராகுல் தெரிவித்து உள்ளார். ராகுல் இந்தியாவை ரேப் கேபிட்டல் எனக் கூறியதாக ஹெச்.ராஜா பதிவிட்டு இருக்கிறார். ஆனால், நரேந்திர மோடி டெல்லியை ரேப் கேபிட்டல் எனக் கூறியதற்கு வீடியோவை பதிவிடுகிறார் ராகுல் காந்தி.

Proof links : 

"Rahul Gandhi Should Be Punished", Says Smriti Irani Over "Rape In India" Remark

'Modi called Delhi a rape capital,' says Rahul Gandhi; refuses to apologise
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை