தடையற்ற நிலையான தூக்கத்தின் முக்கியத்துவம்!
முன்னர் தூக்கமின்மை என்பது மனநலப் பிரச்சனையின் விளைவு என்று கருதப்பட்டது. தற்போது தூக்கமின்மை காரணமாக மனநல பிரச்சனைகள் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கிறது.
இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, L&T தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் ஆகிய தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் வாரத்திற்கு 70-90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று சமீபத்தில் பேசியது சர்ச்சையானது. தொழிலதிபர்கள் வேலை நேரத்தை நீடிப்பதற்காக இவ்வாறு பேசிக்கொண்டிக்கும் நேரத்தில் பெரும்பாலான இந்தியர்கள் சரியாக தூங்குவதில்லை என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

மார்ச் 14ஆம் தேதி ’உலக தூக்க தினத்தையொட்டி (World Sleep Day)’ ’Local Circles’ என்ற நிறுவனம் கள ஆய்வு செய்து ‘இந்தியா எவ்வாறு தூங்குகிறது - 2025’ என்ற அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள 348 மாவட்டங்களில் உள்ள 43,000 நபர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், 59 சதவீத இந்தியர்கள் ஒவ்வொரு இரவும் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையின்றி தூங்குகிறார்கள் என்று தெரிவிக்கிறது. தடையின்றி தூங்காமல் இருப்பது அதாவது, இடையிடையே முழித்து முழித்து தூங்குவதால் இதயம் சார்ந்த நோய், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இரவு நேரங்கள் சிறுநீர் போன்ற இயற்கை உபாதை வருவது, இரைச்சல் மிகுந்த சூழல், கொசு, அதிகநேரம் செல்போன் பார்ப்பது போன்ற காரணங்களால் தூக்கம் தடைபடுவதாகவும் இந்நபர்கள் சொல்கிறார்கள். தடையற்ற நிலையான தூக்கம் இல்லாத குறைபாட்டை ஞாயிறுகிழமை மற்றும் வார இறுதி நாட்களில் பகலில் தூங்குவதன் மூலம் ஈடு செய்கிறார்கள்.

மேற்கூறிய காரணங்கள் பொதுவானதாக இருந்தாலும் குறிப்பாக, பணிச்சுமை, வேலைப் பாதுகாப்பின்மை ஆகிய காரணங்களால் இந்தியர்கள் தங்களது தூக்கத்தை இழப்பதாக சொல்லப்படுகிறது. சரியான தூக்கம் இல்லாததால் பணியாளர்களின் வேலைத் திறன் குறைவது, விடுப்பு எடுப்பது, விபத்துகள் நேர்வது ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகிறது.
மேலும், கடினமாக உழைப்பது, அதிக நேரம் உழைப்பது, தூக்கம் மற்றும் தனிப்பட்ட குடும்ப வாழ்வு ஆகியவற்றுக்காக ஒதுக்கவேண்டிய நேரங்களிலும் உழைப்பது ஆகியவற்றின் மூலமாக பணியிடத்தில் மிக உயர்ந்த பலன்களைப் பெறமுடியும் என்ற ‘Hustle culture’ மனநிலை காரணமாக தூக்கத்தை இழக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியின் போது இந்த Hustle-culture முறையும் சேர்ந்து வளர்ந்தது.

கிரிதர்த் மிட்டல், என்னும் 25 வயதான தொழில்நுட்ப வல்லுநர் செயற்கை நுண்ணறிவு சார்ந்த start up நிறுவனம் ஒன்றின் நிறுவனராக இருந்தார். இவர் ஐந்து மணிநேரத்திற்கு மேல் தூங்காமல், சரியாக உணவு உட்கொள்ளாமல் இரவெல்லாம் விழிந்திருந்து வேலை செய்ததன் விளைவாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் நடந்தது.
ஊதிய உயர்விற்காகவும், பணி உயர்விற்காகவும் இவ்வாறு தூக்கத்தையும் உணவையும் புறக்கணிப்பது உடல் மற்றும் மனநலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

முன்னொரு காலத்தில் தூக்கமின்மை என்பது மனநலப் பிரச்சனையின் விளைவு என்று கருதப்பட்டது. தற்போது தூக்கமின்மை காரணமாக மனநல பிரச்சனைகள் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கிறது. தூக்கம் என்பது வெவ்வேறு நிலைகளைச் சேர்ந்ததாகும். அதில் ‘Rapid Eye Movement (REM) Sleep’ என்பது ஆழ்ந்த தூக்க நிலையை குறிப்பதாகும்.
இந்த ஆழ்ந்த தூக்க (REM) நிலையின் போது மூளையில் உணர்ச்சி (Emotion) தொடர்புடைய பகுதிகளின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உண்டாவதாக சமீபத்திய Neuro Imaging ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, ஆழ்நிலை தூக்கத்தின் (REM) போது மூளை நாம் அன்றைய நாளில், அன்மைக் காலத்தில் கடந்து வந்த உணர்ச்சிகளை அசைபோடுகிறது. இவ்வாறு உணர்ச்சிகளை அசைபோடுவதன் (Processing the emotions) மூலமாக நமது மன இறுக்கம் குறைக்கிறது. இந்த நிகழ்முறை தடைபடும் போதும், சிதைக்கப்படும் போதும் மன இறுக்கம் (Stress) உண்டாகிறது. தடையற்ற தூக்கம் இருந்தால்தான் இந்த ஆழ்நிலை தூக்கம் வரும். அதனால்தான் தடையற்ற நிலையான தூக்கத்தின் முக்கியத்துவத்தை ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.