YouTurn

சவுக்கு சங்கர் பரப்பிய வதந்திகள், போலிச் செய்திகளின் தொகுப்பு !

சவுக்கு சங்கர் பரப்பிய வதந்திகள், போலிச் செய்திகளின் தொகுப்பு !
கடந்த செப்டம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது. அத்தண்டனை நிறுத்தி வைத்தும், சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கியும் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் 2022, டிசம்பர் 12ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

2022 டிசம்பர் 12ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது: “பாலாஜி என்பவர் நீண்ட காலமாக பிளாக் ஷிப் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் தனது மனைவியுடனான சண்டையின் காரணமாக தனியாக தங்கியுள்ளார். அடிக்கடி அலுவலகத்திலும் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 8ம் தேதி இரவு அவர் அலுவலகத்தில் இறந்துள்ளார். அந்த அறையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை பிளாக் ஷிப் நிறுவனம் நீக்கி (Delete) உள்ளது. இதுகுறித்து காவல்துறை எந்தொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என கூறி இருந்தார்.



சவுக்கு சங்கர் பேசியது குறித்து பிளாக் ஷிப் நிறுவனத்திடமும், இறந்த பாலாஜியின் அக்கா மகன் தீபக்கிடமும் யூடர்ன் சார்பாக பேசிய போது, " பாலாஜி கடந்த அக்டோபர் 10ம் தேதி (2 மாதங்களுக்கு முன்பாக) பணியில் சேர்ந்துள்ளார். டிசம்பர் காலை 10.30 மணியளவில் அவர் அலுவலகத்தில் இறந்துள்ளார். அந்த சிசிடிவி காட்சி பதிவும் பாலாஜியின் குடும்பத்தாரிடம் காண்பிக்கப்பட்டுள்ளது.

அந்த சிசிடிவி காட்சி பதிவில் எவ்வித சந்தேகமும் இல்லை என தீபக் கூறினார். மேலும், தங்களது தரப்பில் இருந்து காவல் துறையிடம் எந்த புகார் மனுவும் அளிக்கவில்லை " எனக் கூறினார்.

இது குறித்து யூடர்ன் யூடியூப் சேனலில் வீடியோவும், தீபக்கிடம் பேசிய ஆடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.



 

செஸ் ஒலிம்பியாட் விக்னேஷ் சிவன் :

செஸ் ஒலிம்பியாட் 2022ஐ மார்க்கெட்டிங் செய்வதற்கான ஒப்பந்தம் மிட்சன் ஆட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் வி. சிவ விக்னேஷ் என்பவர் பெரும்பான்மை பங்குதாரர் ஆவார். அவர் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் என ஜூலை 16 2022 அன்று சவுக்குச் சங்கர் பதிவிட்டிருந்தார்.





ஆனால் உண்மை அதுவல்ல. செஸ் ஒலிம்பியாட் 2022ஐ மார்க்கெட்டிங் செய்வதற்கான ஒப்பந்தம் பெற்றதாகக் கூறப்படும் மிட்சன் ஆட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் சிவ விக்னேஷ் என்பவர் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் அல்ல, இரண்டும் வெவ்வேறு நபர்கள் என நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

படிக்க : செஸ் ஒலிம்பியாட் மார்க்கெட்டிங் ஒப்பந்தம் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு வழங்கியதாக வதந்தி !

நாம் தமிழர் கட்சி பற்றி போலிச் செய்திகள் : 

சீன மேலாளரை வந்தேறி என்று கூறி தாக்கிய விவகாரத்தில் திருவாரூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர் குமார் என்பவரை சிங்கப்பூர் அரசு வெளியேற்றியது. மீண்டும் சிங்கப்பூரில் நுழைய வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது எனப் பாலிமர் நியூஸ் கார்டை சவுக்குச் சங்கரும் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.



படிக்க : சீன மேலாளரை வந்தேறி என்றதால் நா.த.கட்சி உறுப்பினருக்கு சிங்கப்பூர் அரசு தடையா ?

இந்த செய்தி போலியானது என்றும், இந்த நியூஸ் கார்டு போட்டோஷாப் செய்யப்பட்டது என நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரும், அக்கட்சி சார்பாக ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளும் இடும்பாவனம் கார்த்திக் என்பவர் பனங்காட்டுப் படை கட்சியில் இணைந்ததாக ஹரி நாடார் உடன் கார்த்திக் இருக்கும் புகைப்படத்தைச் சவுக்குச் சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.



படிக்க : இடும்பாவனம் கார்த்திக் பனங்காட்டுப் படை கட்சியில் இணைந்ததாக பரவும் ஃபோட்டோஷாப் புகைப்படம் !

ஆனால், டிசம்பர்24-ம் தேதி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி ஹரி நாடார் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தில் இப்படி ஃபோட்டோஷாப் செய்துள்ளனர் என்றும், இடும்பாவனம் கார்த்தியும் தன் ட்விட்டர் பக்கத்தில் சவுக்குச் சங்கர் பதிவை பகிர்ந்து விமர்சித்து இருக்கிறார் என்றும் நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பற்றி போலிச் செய்தி : 



தலைவி படம் பார்த்த பின் நானே எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் சவுக்கு சங்கர் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். ஆனால், அவர் பதிவிட்ட ஆனந்த் விகடன் நியூஸ் கார்டு போலியானது மற்றும் எடிட் செய்யப்பட்டது என நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

படிக்க : கங்கனா ரணாவத் என் இளமை நரம்பை முறுக்கேற்றி விட்டார் என ஜெயக்குமார் கூறினாரா ?

பாஜகவிற்கு எதிராக போலிச் செய்திகள் : 

"மிஷினரிகள் கோயில் சிலைகளை உடைத்ததாகப் பொய்களைப் பரப்பி 33 லட்சம் ரூபாய் பணத்தை வசூல் செய்து திருடிய பாஜகவை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத். அண்ணாமலைக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் பாதிப் பணத்தை மத்திய மந்திரிகளைத் திருப்திப்படுத்த செலவு செய்ததாகவும் போதையில் உளறல் " என எடிட் செய்யப்பட்ட ஜூனியர் விகடனின் நியூஸ் கார்டை சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.



படிக்க : வசூல் செய்ததில் அண்ணாமலைக்கும் தொடர்பு இருப்பதாகக் கார்த்திக் கோபிநாத் கூறினாரா ?

தற்கொலை செய்து கொண்ட தஞ்சை மாணவியின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் 2 கோடி நிதியுதவி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாகவும், பாஜக அண்ணாமலையை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்ததாகவும் தந்தி டிவி பெயரில் போலியான நியூஸ் கார்டுகளை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.



படிக்க : மாணவியின் குடும்பத்திற்கு பாஜக 2 கோடி நிதியுதவி, அண்ணாமலையை விமர்சித்த ராமதாஸ் எனப் பரவும் போலிச் செய்திகள் !

தமிழக பாஜகவின் முன்னாள் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் என்பவர், இந்தி தெரியாதவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் எனக் கூறியதாக பரவிய நாரதர் மீடியா நியூஸ் கார்டு ஒன்றை சவுக்குச் சங்கரும் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.



ஆனால் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் சொன்னதாகப் பரவி வந்த நியூஸ் கார்டு போட்டோஷாப் செய்யப்பட்டது என நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

படிக்க : இந்தி தெரியாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பாஜக இளைஞரணி தலைவர் கூறியதாக வதந்தி !

திமுக அரசின் பட்ஜெட் அறிக்கையில் பசுத் தொடர்பாக எந்த திட்டமும், நிதியும் இல்லை என்பதால் அதைக் குப்பை பட்ஜெட் எனப் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்ததாக நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வந்தது. இதனைச் சவுக்குச் சங்கர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். இதுவும் எடிட் செய்யப்பட்டது என கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.



படிக்க : கோமாதாவுக்கு நிதி ஒதுக்காத குப்பை பட்ஜெட் என ஹெச்.ராஜா கூறினாரா ?

இதேபோல், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் பேசியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கூறியதாக போலியான நியூஸ் கார்டை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.



படிக்க : குழந்தைகளின் ரியாலிட்டி ஷோ விவகாரத்தில் அண்ணாமலை பற்றிப் பரவும் போலிச் செய்திகள் !

ராஜீவ் காந்தியின் போலி ட்விட்டர் பக்க பதிவு  :

திமுகவின் ராஜீவ் காந்தியின் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு ” எங்கள் சின்னச் சின்னவர் ” எனக் கூறி புகைப்படம் பகிர்ந்ததை ஸ்க்ரீன்சார்ட் எடுத்து ராஜீவ் காந்தியின் உண்மையான ட்விட்டர் பக்கத்தை டக் செய்து சவுக்குச் சங்கர் விமர்சித்து பதிவிட்டிருந்தார்.



படிக்க : இன்பநிதியை “சின்ன சின்னவர்” எனக் கூறி ராஜீவ் காந்தி பதிவிட்டதாக பரப்பப்படும் போலி ட்வீட் !

Update (17.05.2024)


ஏப்ரல் 2024

திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு வீட்டில் ED சோதனை:

திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போதை மருந்து கடத்தல் தொடர்பாக சோதனை நடத்துவதாக சவுக்கு சங்கர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.



போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிகிற்கு தொடபுடைய இடங்களில் ED அன்றைய தினத்தில் சோதனை நடத்தியது. இது தொடர்பான செய்திகளும் வெளியாகின. ஆனால், திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக எதிலும் குறிப்பிடப்படவில்லை. 



மேலும் படிக்க: திமுகவைச் சேர்ந்த சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை என பொய் செய்தி பரப்பும் சவுக்கு சங்கர்!

மார்ச் 2024 

2017ல் ஜாபர் சாதிக்கை ஜாமீனில் எடுக்கும்போது பால் கனகராஜ் திமுகவில் இருந்தார்:

டெல்லியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப் பொருள்களைக் கடத்தலில் திரைப்படத் தயாரிப்பாளரும் திமுக-வை சேர்ந்தவருமான ஜாஃபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டார். இது குறித்து சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, 2017ம் ஆண்டு ஜாபர் சாதிக்கை வழக்கறிஞர் பால் கனகராஜ் ஜாமீனில் எடுத்தார். அப்போது பால் கனகராஜ் திமுகவில் இருந்தார் என்றார்.



கனகராஜ் பிப்ரவரி 2009ம் ஆண்டு வரை திமுகவில் உறுப்பினராக இருந்தார். பிப்ரவரி 19, 2009 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அவர் கட்சியில் இருந்து விலகினார். பிறகு தமிழ் மாநிலக் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கிய இவர், 2020ல் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். 



மேலும் படிக்க: ஜாபர் சாதிக்கை வெளியே எடுக்கும் போது பால் கனகராஜ் திமுகவில் இருந்ததாகப் பொய் பரப்பும் சவுக்கு சங்கர் !

பிப்ரவரி 2024

ஜாவர் சாதிக் தயாரித்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்:

போதைப் பொருள் கடத்தலில் திரைப்படத் தயாரிப்பாளரும் திமுக-வை சேர்ந்தவருமான ஜாஃபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது. இதற்கு முன்னதாக அவர் தயாரித்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியதாக ‘மங்கை’ என்ற படத்தின் போஸ்டரை சவுக்கு சங்கர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 



அத்திரைப்படத்தை குபேந்திரன் காமாட்சி என்பவர் இயக்கியுள்ளார். மேலும் அந்த போஸ்டரின் மங்கை திரைப்படத்தின் ’ஏலம்மா ஏலோ’ பாடலை இயக்குநர் கிருத்திகா வெளியிடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இயக்குநர் எனக் குறிப்பிட்டதும் அப்படத்தினை இயக்கியவர் என தவறான தகவலை பரப்பினார். 



மேலும் படிக்க: போதை மருந்து கடத்தியவர் தயாரிக்கும் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குவதாகச் சவுக்கு சங்கர் பரப்பும் பொய்!

டிசம்பர் 2023

மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டின் பேரிடரென திமுக-வை சேர்ந்த ராஜீவ் காந்தி கூறினார்:

“இந்தியாவின் பேரிடர் மோடி, தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின்” என திமுகவை சேர்ந்த ராஜீவ் காந்தி பேசியதாக ஜூனியர் விகடன் செய்தி வெளியானது போல ஒரு புகைப்படத்தை சவுக்கு சங்கர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 



ஜூனியர் விகடனுக்கு ராஜீவ் காந்தி அளித்த நேர்காணலில் ’இந்தியாவைப் பிடித்த பேரிடர் மோடி என்றால், தமிழ்நாட்டைப் பிடித்த பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்’ எனக் கூறியுள்ளார். அதனை கொண்டு ஜூனியர் விகடனும் கார்டு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அட்டைப் படத்தில் உள்ள நிர்மலா சீதாராமன் என்கிற பெயரை எடிட் செய்து மு.க.ஸ்டாலின் என இருப்பது போன்று போலியாக மாற்றியுள்ளனர். அந்த போலி கார்டினைதான் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார்.



மேலும்  படிக்க : தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின் என ராஜீவ் காந்தி கூறியதாக சவுக்கு சங்கர் பகிர்ந்த எடிட் செய்த படம்!

ஜூன் 2023

2001ல் கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஸ்டாலின் தலைமறைவானார்:

2001ம் ஆண்டு கலைஞரைக் கைது செய்தபோது மு.க.ஸ்டாலின் பெங்களூருக்கு சாலை மார்க்கமாக தப்பிச் சென்றதாக சவுக்கு சங்கர் நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார். 



ஜூன் 29ம் தேதி நள்ளிரவு கலைஞரை கைது செய்யும் பொருட்டு அவரது வீடு, முரசொலி மாறனின் வீடு காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. அதே நேரத்தில் வேளச்சேரியிலிருந்த ஸ்டாலின் வீட்டையும் காவல்துறையினர் சூழ்ந்துள்ளனர். ஆனால், இதற்கு முன்னதாகவே ஸ்டாலின் அவரது உறவினரை சந்திக்க பெங்களூர் சென்றுள்ளார். கலைஞரின் கைதையடுத்து ஜூன் 30ம் தேதியே அவரும் நீதிபதி முன்னிலையில் சரணடைந்துள்ளார். 



மேலும் படிக்க: 2001ல் கலைஞரை கைது செய்த போது மு.க.ஸ்டாலின் தலைமறைவாக இருந்ததாக சவுக்கு சங்கர் பரப்பிய பொய்!

மார்ச் 2023

திமுக எம்பிக்கள் க்ரூப் போட்டோவில் ரவீந்திரநாத்:

குடியரசுத் தலைவருடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டதில் அதிமுக மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் உள்ளார் என சவுக்கு சங்கர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். 



அப்புகைப்படம் டெல்லி, கோவா, தமிழ்நாடு, புதுச்சேரி முதலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ராஷ்டிரபதி பவனின் கலாச்சார மையத்தில் காலை உணவு விருந்து அளிக்கும் போது எடுக்கப்பட்டது. அப்படத்தில் பாஜகவைச் சேர்ந்த எம்.பிக்களும் உள்ளனர்.



மேலும் படிக்க: திமுக எம்பிக்கள் குரூப் போட்டோவில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் என சவுக்கு சங்கர் பரப்பும் பொய்!

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவிற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைக்கவில்லை:

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு  இடதுசாரி கட்சிகள், வைகோ, மற்றும் திருமாவளவன் அழைக்கப்படவில்லை என சவுக்கு சங்கர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 



ஆனால், முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. 



மேலும் படிக்க: முதலமைச்சர் பிறந்தநாள் விழாவிற்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைக்கவில்லை எனப் பொய் பரப்பிய சவுக்கு சங்கர்!

ஜனவரி 2023 

ஆளுனர் அளித்த விருந்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்:

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரைக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் போது ஆளுநர் வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்விற்கு பிறகு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அளித்த பொங்கல் விழா நிகழ்ச்சியை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன.



இந்நிலையில்,ஆளுநர் அளித்த விருந்தில் திமுக அமைச்சர்கள் பொன்முடி மற்றும் பெரிய கருப்பன் கலந்து கொண்டதாக புகைப்படம் ஒன்றை சவுக்கு சங்கர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 



அது அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம். பட்டமளிப்பு விழா முடிந்ததும் பல்கலைக்கழக நிர்வாகம் விருந்தினர்களுக்கு உணவு வழங்கியபோது எடுக்கப்பட்ட படத்தை ஆளுநர் அளித்த விருந்து எனத் தவறான செய்தி பரப்பினார். 

மேலும் படிக்க : தமிழ்நாடு ஆளுநர் அளித்த விருந்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றதாக சவுக்கு சங்கர் பரப்பும் பொய்!

திமுக அரசு மூதாட்டிக்கு உதவித் தொகையை நிறுத்தியது: 

சிவகாசியைச் சேர்ந்த புஷ்பம் என்ற மூதாட்டிக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை 7 மாதமாகக் கிடைக்கவில்லை என எக்ஸ் பக்கத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டிருந்தார். 

இது குறித்து சிவகாசி தனி வட்டாட்சியர் ஆனந்தராஜ் மற்றும் புஷ்பத்தின் மகன் சண்முக கணேசன் 2021ம் ஆண்டே விளக்கம் அளித்துள்ளனர். அதில், தனது தாயினை நலமாக பார்த்து கொள்வதாகவும் தாங்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பதால் முதியோர் உதவித்தொகை தனது தாயுக்கு தேவையில்லை எனவும் சண்முக கணேசன் கூறியுள்ளார். ஆனால், பழைய செய்தியையே மீண்டும் சவுக்கு சங்கர் பரப்பியுள்ளார்.



மேலும் படிக்க: திமுக அரசு மூதாட்டிக்கு உதவித் தொகையை நிறுத்தியதாக பழைய செய்தியை பரப்பிய சவுக்கு சங்கர்!
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை