வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மூளைச்சாவு அடைந்து விட்டாரா ?| ஆதாரமில்லா செய்திகள்.
வடகொரியா தேசத்தின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலம் மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச அளவில் செய்திகள் பறக்கின்றன. சமூக வலைதளங்களில் கிம் இறந்து விட்டதாகவும் கூட செய்திகள் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. 36 வயதான கிம் ஜாங் உன்-க்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிலநாட்களாக...

36 வயதான கிம் ஜாங் உன்-க்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிலநாட்களாக கிம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது பல்வேறு சந்தேங்களை எழுப்பி உள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 15-ம் தேதி கிம் ஜாங் உன்-னின் தாத்தாவும், வடகொரியாவை உருவாக்கிய தலைவருமான கிம் இல் சங் உடைய பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை. கிம் இல் சங் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிம் இதுவரை கலந்து கொள்ளாமல் இருந்தது இல்லை. இதுவே சந்தேகங்களுக்கு வழிவகுத்தது.
ஏப்ரல் 11 மற்றும் 12-ம் தேதிகளை நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட கிம், அதன்பின் பொது இடங்களில் இடம்பெறவில்லை. அமெரிக்க ஊடகங்களில் கிம் உடல் நிலை குறித்து தலைப்பு செய்திகள் வெளியாகியதால், கிம் உடல் மிகவும் மோசமாக இருக்கிறது, அவர் மூளைச்சாவு அடைந்து விட்டார், இறந்து விட்டார் என்கிற செய்திகள் எல்லாம் சமூக ஊடகங்களில் பரவுகிறது.

மேலும், கிம்-க்கு பிறகு அடுத்த வடகொரியா அதிபர் யார் என்கிற யூகங்களும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு அடுத்ததாக, கிம் உடைய சகோதரி கிம் யோ ஜோங் தலைவர் பொறுப்பை ஏற்பார், சில காலமாக கிம் கலந்து கொள்ளும் கூட்டங்களில் அவர் இடம்பெற்று வருகிறார் என மேற்கொள்காட்டப்பட்டு வருகிறது.
ஆதாரமில்லா வதந்திகள் :

வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்து பரவிய அனைத்து தகவல்களையும் தென்கொரிய அரசாங்கமும், சீன உளவுத்துறை அதிகாரிகளும் மறுத்துள்ளனர். கிம் ஜாங் உன் மிக மோசமான நிலையில் இருக்கிறார் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. வடகொரியாவில் அப்படியான எந்தவொரு அறிகுறியும் நிலவவில்லை என தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
பிபிசி வெளியிட்ட தகவலின் படி, வடகொரியாவில் இருந்து வெளியேறியவர்கள் தொடங்கிய இணையதளத்திலேயே கிம் ஜாங் உன் உடைய உடல்நலம் குறித்த தகவல்கள் வெளியாகி பிறகு ஊடகங்களில் தகவல் பரவின எனக் கூறப்பட்டுள்ளது.

கிம் ஜாங் உன் பற்றி வதந்திகள் பரவுவது இது முதல் முறை அல்ல. 2014-ல் கிம் தோராயமாக 40 நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் இடம்பெறாமல் இருந்தார். அதற்கு காரணமாக ஆட்சிக் கவிழ்ப்பு, அவருக்கு முடக்குவாதம் என பல வதந்திகள் பரவி இருந்தன.
தற்போது கிம் குறித்து பரவும் தகவல்கள் தொடர்பாக வடகொரியாவின் அரசு ஊடகம் தரப்பில் உறுதியான செய்திகள் வெளியாகவில்லை. அந்நாட்டில் பத்திரிகை பணி மிகவும் சவால் நிறைந்தது எனக் கூறப்படுகிறது.
சமூக ஊடங்களில் கிம் ஜான் உன் உடல்நலம் குறித்து வெளியாகும் தகவலுக்கு ஆதாரமில்லை. வதந்திகளை நம்பாமல், பகிராமல் இருங்கள்.
Proof links :
US monitoring intelligence that North Korean leader is in grave danger after surgery
South Korea confirms reports of Kim Jong-un being 'gravely ill' untrue
Kim Jong-un illness rumours denied amid intense speculation