கடையம் கொள்ளை சம்பவத்திற்கு காரணம் எலுமிச்சை வருமானமா ?
திருநெல்வேலி மாவட்டம் கடையம் பகுதியில் கடந்த 11-ம் தேதி இரவில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை தம்பதியினர் வசித்து வந்த வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் இருவரை தம்பதியர்கள் துணிச்சலாக எதிர்கொண்டு அவர்களை எதிர்த்தாக்குதல் நிகழ்த்தி விரட்டி அடித்த காட்சிகள் அனைத்தும் அவர்களின் வீட்டில்...

கணவன்-மனைவி இருவரின் துணிச்சலான செயல் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது. கொள்ளையர்களை எதிர்த்து தாக்கிய பொழுது செந்தாமரை அவர்களின் கையில் காயங்கள் ஏற்பட்டது. அவரின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயினையும் கொள்ளையர்கள் பறித்து சென்று விட்டனர் எனக் கூறியுள்ளனர்.

கடையம் பகுதியில் வீட்டில் புகுந்து கொள்ளையில் ஈடுபட முயன்ற சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடந்தி வருகின்றனர். இந்நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அதீத துணிவிற்காக சண்முகவேல்-செந்தாமரை தம்பதியினருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதில், தம்பதியினருக்கு 2 லட்சத்துக்கான காசோலை, தங்க பதக்கம் மற்றும் சான்றிதழை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

இந்நிலையில், கடையம் சண்முகவேல்-செந்தாமரை தம்பதியினர் வீட்டில் கொள்ளை அடிக்க காரணம் அவர்களின் எலுமிச்சை விவசாயம் குறித்து பசுமை விகடனில் வெளியான கட்டுரையே என்றும், அவர்களின் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என நினைத்து கொள்ளையர்கள் சென்று இருக்கிறார்கள் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பசுமை விகடன் இதழின் முகப்பு புகைப்படம் வைரலாகி வருகிறது.

பசுமை விகடனில் சண்முகவேல்-செந்தாமரை தம்பதியினர் குறித்து கட்டுரை வெளியாகி இருக்கிறதா என அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம். கொள்ளை சம்பவம் நடந்த 11-ம் தேதிக்கு முன்பாக ஆகஸ்ட் 9-ம் தேதி பசுமை விகடனில் " இயற்கையில் இனிக்கும் எலுமிச்சை... இரண்டரை ஏக்கர்… ஆண்டுக்கு ரூ. 7,80,000 லாபம்! " என்ற தலைப்பில் சண்முகவேல்-செந்தாமரை தம்பதியினரின் எலுமிச்சை சாகுபடி தொடர்பான கட்டுரை வெளியாகி இருக்கிறது.
சண்முகவேல் தன் வீட்டிற்கு பின் பக்கம் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் முறையில் எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறார். எலுமிச்சை சாகுபடியில் வருடத்திற்கு 32,000 கிலோ நாட்டு எலுமிச்சையை பெறுகிறார். ஒரு கிலோவிற்கு அதிகபட்சமாக 130 ரூபாய் வரை விற்பனை செய்திருக்கேன் எனத் தெரிவித்து உள்ளார்.
" கடந்த ஆண்டில் 32,500 கிலோ எலுமிச்சை விற்பனை செய்ததில் 11,37,500 ரூபாய் வருமானம் கிடைத்தது. அதில், அனைத்து செலவுகளும் போக 7,87,500 ரூபாய் லாபம் கிடைத்ததாக " சண்முகவேல் பேட்டி அளித்தது கட்டுரையாக இடம்பெற்று இருக்கிறது.
கொள்ளையர்கள் தெரிந்தவர்களாக கூட இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். ஆபத்தான நேரத்தில் துணிவுடன் செயல்பட்ட சண்முகவேல்-செந்தாமரை தம்பதியினருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
link :
இயற்கையில் இனிக்கும் எலுமிச்சை... இரண்டரை ஏக்கர்… ஆண்டுக்கு ரூ. 7,80,000 லாபம்!