8,931 நாட்கள் விடுமுறையே எடுக்காதவரா மோடி? ஒன்றிய அரசு பரப்பும் போலி சாதனை!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த காலம் தொட்டு, இன்று நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவி வகித்து வரும் வரை 24 ஆண்டுகள் விடுமுறையே எடுக்காமல் நாட்டுக்காக உழைத்து வருவதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த காலம் தொட்டு, இன்று நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவி வகித்து வரும் வரை 24 ஆண்டுகள் விடுமுறையே எடுக்காமல் நாட்டுக்காக உழைத்து வருவதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வாணொளியான ஆகாச வாணியின் இணையப்பக்கத்திலும் இச்செய்தி வெளியாகியுள்ளது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி 8,931 நாட்கள் ஓய்வின்றி விடுமுறையின்றி பணிபுரிந்து வருவதாகவும், இதன் மூலம் 8,930 நாட்கள் விடுமுறையே எடுக்காமல் பணிபுரிந்த சிக்கிம் மாநில முன்னாள் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை அவர் முறியடித்துவிட்டார் என்றும் போற்றியுள்ளார்.
உண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தான் வகித்த, வகித்து வரும் அரசுப் பதவிகளில் விடுமுறையே எடுக்கவில்லையா? இதைத் தற்போது செய்தியாக வெளியிட்டுப் போற்றி வரும் ஊடகங்களில்தான் கடந்த 12 ஆண்டுகளாக மோடி பிரதமர் பதவியேற்றதுமுதல் ஒரு செய்தி அடிக்கடி வெளியாகிக்கொண்டிருந்தது.
காலி இருக்கை
அதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற வருகைப்பதிவேடு. ஆம், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் சமயங்களில் பிரதமர் நரேந்திர மோடி பெரும்பாலும் அவையில் இருந்ததே இல்லை. சன்சாத் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற அமர்வுகளின் நேரலையைக் காண நேரும்போதெல்லாம் பிரதமரின் இருக்கை காலியாகவே இருக்கும்.
இது இன்று நேற்று தொடங்கிய பிரச்சனையல்ல.. தசாப்தங்களைக் கடந்தும் தீராத பிரச்சனையை இந்த தேசம் அறிந்துகொள்ள வேண்டும். தற்போது சன்சாத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் தொலைக்காட்சி, லோக் சபா டிவி, ராஜ்ஜிய சபா டிவி என்ற பெயரில் செயல்பட்ட காலத்திலும் பிரதமரின் இருக்கை என்பது காலியாகவே இருக்கும். என்.டி.ஏ.-1 என்று அழைக்கப்பட்ட மோடி முதல் முறை பிரதமராகப் பதவி வகித்த 2014 - 2019 காலக்கட்டத்திலேயே அவர் சரியாக நாடாளுமன்றத்திற்குச் செல்லவில்லை.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இது குறித்து ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சி 2018 ஆம் ஆண்டு தனி கட்டுரையே வெளியிட்டது. அந்தச் சமயத்தில் LocalCircles நிறுவனம் நடத்திய ஆன்லைன் சர்வேயில் 61% இந்தியர்கள் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு தவறாமல் வருகை புரிந்தால் செயல்பாடுகள் மேம்படும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 75% க்கும் குறைவான வருகையைக் கொண்டிருந்தால் அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் அளவுக்குப் பிரச்சனை பெரிதானது. ஆனாலும், பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத் தொடர்களில் ஆப்செண்டாகவே இருந்து வந்தார்.
ஓராண்டில் 4 மணி நேரம்
கடந்த 2021 ஆம் ஆண்டு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டங்களில் பிரதமர் வெறும் 4 மணி நேரம் மட்டுமே இருந்துள்ளார் என்று திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டேரிக் ஓ பிரையன் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரங்களில் மணிக்கணக்கில் பேசும் பிரதமர் மோடியால், நாடாளுமன்றத்தில் மட்டும் பேச முடியவில்லை என்றால், அவருக்கு Parliamentophobia? என்ற வியாதி உள்ளதா என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிரதமர் அலுவலகம் தரப்போ, பாஜக தரப்போ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
மணிப்பூர் கலவரம்
2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் கலவரம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதுகுறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய சமயத்திலும், மோடி அவைக்கு வராமல் ஆப்செண்ட் ஆனார்.
சரி, பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமருக்கு ஏதோ பிரச்சனை உள்ளது, புதிதாக கட்டி குடியரசுத் தலைவர் இல்லாமல் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்காவது பிரதமர் மோடி வருவார் என்று பார்த்தால், அங்கும் பழைய கதையே தொடர்ந்தது. 18 முதல் 24 நாட்கள் நடைபெறும் ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தில் வெறும் 4 நாட்கள் மட்டுமே பிரதமரின் வருகையைக் காண முடிவதாக எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றனர்.
புதிய வருகைப்பதிவேடு முறை
இப்படி பிரதமரின் வருகைப் பதிவேட்டைச் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில்தான், வரும் ஜூலை மாதம் முதல் நாடாளுமன்றத்தில் அமலுக்கு வர இருக்கும் MMA எனப்படும் Multimedia Attendance முறையிலிருந்து பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில்தான் நாச்சியப்பன் பாத்திரக்கடையில் வடிவேலு தனக்கு தானே கோப்பை வாங்கிக்கொள்வதுபோல், பிரதமர் மோடியின் பெயரில் புதிய சாதனைக் கணக்கை எழுதியிருக்கிறது ஒன்றிய அரசும், பாஜகவும்.