எழும்பூரில் சாலையோரம் வசித்த 56 குடும்பங்கள் வெளியேற்றம்.. மாற்று வீடுகள் எப்போது ?

அக்டோபர் 16-ம் தேதி எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை ஒட்டிய சாலையோரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்த 56 குடும்பங்களை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி உள்ளனர். அவர்கள் தற்காலிகமாக கண்ணப்பர் திடல் அருகே உள்ள நகர்ப்புற வீடற்றோருக்கான கூடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வலுக்கட்டாயமாக தாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும், தாங்கள் வாழ்ந்த இடத்திலேயே வீடுகள் வேண்டி மக்கள் எழும்பூர் எம்எல்ஏ அலுவலகம் முன்பாக போராட்டத்திலும் இறங்கினர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியைச் சேர்ந்த செல்வா கூறுகையில், " எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரத்தில் வசித்து வந்த 56 குடும்பங்ளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு மாற்று வீடுகள் இன்னும் அளிக்கப்படவில்லை. அவர்களை கண்ணப்பர் திடல் அருகே உள்ள கூடத்தில் தங்க வைத்துள்ளனர். அந்த மக்களுக்கு மாற்று இடங்கள் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டோம். இன்று பேசிய எழும்பூர் எம்எல்ஏ, இப்போது தற்காலிகமான தங்குமிடத்தில் இருக்குமாறும், இன்னும் 20 நாட்களில் வீடுகள் அளிக்கப்படும் எனக் கூறி இருக்கிறார். அந்த மக்களுக்கு விரைவாக மாற்று இடங்கள் வழங்கப்பட வேண்டும் " எனத் தெரிவித்து இருந்தார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எழும்பூர் திமுக எம்எல்ஏ பரந்தாமன், நடைபாதையில் வசித்துக் கொண்டிருப்பவர்கள் மழைக் காலத்தில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தான் முன்கூட்டியே மாநகராட்சி அதிகாரிகள் அவர்களை எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீடற்றோருக்கான கூடத்தில் தங்க வைத்துள்ளனர். 2 வாரங்களில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படுவதாக " தெரிவித்து இருக்கிறார்.
மேலும், எழும்பூர் ரயில் நிலையம் அருகில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு நிரந்தர வீடு கொடுக்கும் திட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது தங்கவைக்கப்பட்டுள்ள முகாமை பார்வையிட்டதாக எம்எல்ஏ பரந்தாமன் உடைய முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
Facebook link
இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பை தொடர்பு கொண்ட போது நமக்கு பதில் அளிக்கவில்லை. " அங்குள்ள மக்களை 10 நாட்களுக்கு மட்டும் கூடத்தில் தங்குமாறு கூறியுள்ளோம். அவர்களுக்கு வீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் உள்ள குடியிருப்பு விருப்பங்களில் ஒன்றாக இருப்பதாக " சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
எழும்பூர் ரயில் நிலையம் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் மீண்டும் அதே பகுதிக்கு சென்று சாலையோரங்களில் தங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. சாலையோரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு நிரந்தர மாற்று வீடுகள் எப்போது. எப்படி எங்கு கிடைக்கும் என்கிற கேள்விகள் எழுகின்றன. அதற்கு காரணம், கூவம் அருகே வசித்த மக்களுக்கு மாற்று வீடுகளுக்கான டோக்கன்கள் வழங்கினார்கள். ஆனால், இவர்களுக்கு அப்படி எதுவும் வழங்கவில்லை.
அதேபோல், மாற்று வீடுகள் எத்தனை நாட்களில் ஒதுக்கப்படும் என்பது குழப்பமாகவே இருக்கிறது. 10, 20 நாட்களா அல்லது மாதக்கணக்கில் கூட மக்கள் கூடத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்குமா என்கிற கேள்வி இருக்கிறது. சென்னையின் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் சிந்திக்கும் அரசு தினசரி வருமானத்தை நம்பி இருக்கும் இத்தகைய வீடற்ற மக்களுக்கு நிரந்தர வீடுகளை உடனடியாக வழங்க வழிவகை செய்ய வேண்டும். அதற்கான குரல்களும் எழுப்பப்பட வேண்டும்.
ஆக்கிரமிப்பு செய்யும் வசதியானவர்கள் கட்டிடம் எல்லாம் ஒரே அடியாக இடித்து தள்ளி விட்டனர் என்ற செய்தி மட்டும் எங்கும் வருவதே இல்லை.