என்.ஐ.ஏ-க்கு முன்னரே 'ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர்' அமைப்பினரை கைது செய்த தமிழ்நாடு காவல்துறை!
சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் காவல்துறை விசாரித்து வழக்கு பதிவு செய்த பிறகுதான் NIA தனியாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. பாஜக தனது அரசியல் லாபத்திற்காக பொய் பிரச்சாரம் செய்கிறது.
சீனா, பாகிஸ்தான்,ஜெர்மனி, துருக்கி மற்றும் சில அரபு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்ட ’ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர்’ என்ற இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் பேசியவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுபற்றி தமிழ்நாடு பாஜக தங்களது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.
அதில், “உங்கள் திறனற்ற ஆட்சியினால் கொலை, கொள்ளை, போதைப்பொருள் என்பதைத்தாண்டி இப்போது தமிழகம் தீவிரவாதிகளின் பிடிக்குள்ளும் சென்றுவிட்டதா?” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் சிலர் செயல்பட்டுள்ளனர். அதனைத் தமிழ்நாடு காவல்துறை கண்டுகொள்ளவில்லை, தேசிய புலனாய்வு முகமை (NIA)தான் இதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என பாஜக தனது பதிவின் மூலம் தெரிவிக்கிறது. (குறிப்பு: ’ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர்’ என்ற அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று அல்ல.)
ஆனால், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் காவல்துறைதான் முதலில் இதனைக் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்தது. பிறகுதான் இந்த வழக்கை NIA விசாரிக்கத் தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற தனது யூடியூப் பக்கத்தில் இந்திய இறையாண்மை, அரசியல் அமைப்பு, அடிப்படை உரிமைகளுக்கு எதிராக பேசி வீடியோக்களை பதிவிட்டுள்ளார் எனவும் மேலும் அவரது பேச்சுகள் மக்களைப் பிளவுபடுத்தும் விதமாக இருந்ததுடன் 'ஹிஸ்ப் உத் தஹ்ரிர்' இயக்கத்துக்கு ஆதரவாக இருந்ததும் காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. இதனால் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் காவல்துறை ஹமீது உசேன் உட்பட 6 பேரை கடந்த மே மாதம் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியது. அவர்கள்மீது UAPA (Unlawful Activities (Prevention) Act) சட்டத்தின்கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் தேசிய புலனாய்வு முகமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னை NIA அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் தனியாக வழக்குப்பதிவு செய்து, ஹமீது உசேன் உள்ளிட்ட 6 பேரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்திவருகின்றனர். மேற்கொண்டு அவர்களுக்கு தொடர்புள்ளதாக சந்தேகப்படும் இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கு தொடர்பான NIA-வின் முதல் தகவல் அறிக்கையிலும் தமிழ்நாடு காவல்துறை ’21.05.2024’ அன்று வழக்குப்பதிவு செய்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், பாஜக தனது வீடியோவில் தமிழ்நாடு அரசு இத்தகைய குற்றச்சம்பவத்தைக் கண்டுகொள்ளாதது போலவும் தேசிய புலனாய்வு முகமைதான் இதனைக் கண்டறிந்தது போலவும் தனது அரசியல் லாபத்திற்கு பொய் பிரச்சாரம் செய்கிறது.