ஊடகத்தை இழிவாக பேசிய மாரிதாஸிற்கு ஆதாரத்துடன் பதில் !
2020 பிப்ரவரி 7-ம் தேதி " திமுக + செய்தியாளர்கள் சமூகத்தின் கேடு " என்ற தலைப்பில் மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில் நிர்மலா தேவி விவகாரம் மற்றும் முன்னாள் திமுக எம்எல்ஏ 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கு தொடர்பாக பேசி இருந்தார். அதில், ஊடகத்தில் பணிபுரிபவர்களின்...

குறிப்பாக, நிர்மலா தேவி விவகாரத்தை பெரிதுபடுத்திய ஊடகங்கள் திமுக முன்னாள் எம்எல்ஏ ராம்குமார் மற்றும் அவரின் கூட்டாளிகள் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணத்திற்கு காரணமாக இருந்த வழக்கு தொடர்பாக பேசவே இல்லை எனக் கூறியிருந்தார். இதுதொடர்பாக யூடர்ன் ஆசிரியர் பேசிய வீடியோ வெளியிடப்பட்டது. அதற்கான ஆதாரங்களை தொகுத்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
2018-ல் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணத்திற்கு காரணமான வழக்கில் அவருக்கும், அவரின் கூட்டாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது அனைத்து செய்தி சேனல்களிலும் திமுக முன்னாள் எம்எல்ஏ புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.


திமுக முன்னாள் எம்எல்ஏ சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக யூடர்ன் தரப்பிலும் " Rapist DMK MLA " என்ற தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டது. ஆக, ஊடகம் முதல் பலரும் திமுகவின் முன்னாள் எம்எல்ஏ மீதான சிறுமி பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கு தொடர்பாக செய்தி வெளியிட்டு உள்ளார்கள்.
யாருமே திமுக எம்எல்ஏ செய்ததாக கூறவே இல்லை என்ற பொய்யை கத்தி கத்தி வீடியோவில் சொல்லி உள்ளார். ஆனால், திமுக எம்எல்ஏ எனக் கூறியே செய்திகள் வெளியாகி இருக்கிறது. அடுத்ததாக, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானவர்களை கற்பழிப்பு எனக் கூறுவதே தவறானது, அதையே அவர் அதிகம் பயன்படுத்தி வருகிறார். ஊடகங்கள் பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்புணர்வு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்ட பெண், சிறுமியின் புகைப்படத்தையும், பெயரையும் வெளியிடக்கூடாது என்பது அறம் மற்றும் சட்டம். ஆனால், மாரிதாஸ் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை குறிப்பிட்டு இருக்கிறார்.

நிர்மலா தேவி விவகாரத்தை எடுத்துக் கொண்டால் நக்கீரன் திசை திருப்பி விட்டார்கள் எனக் கூறி இருந்தார். விமர்சனம் இருப்பது தவறில்லை. ஆனால், 2018 பிப்ரவரி மாதமே டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் சண்டே கார்டியன் உள்ளிட்டவை வெளியிட்ட செய்தியில், " தென்னிந்தியாவை சேர்ந்த ஆளுநர் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளது. அவரின் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்னவென்றால், அங்கு வேலை பார்க்கும் பெண்ணிடம் பாலியல் ரீதியான எதிர்பார்ப்பை கொண்டிருந்தார், அது மத்திய அரசிற்கு தெரிந்து சிக்கலாகி உள்ளது. எந்த மாநிலத்தின் கவர்னர் என அமைச்சகம் பெயரை குறிப்பிடவில்லை, ஆனால் அப்படியொரு தகவல் இருப்பதாக " வெளியிட்டு இருந்தனர்.

இந்த கட்டுரைகளின் அடிப்படையில் அவுட்லுக் இன்னொரு செய்தியும் வெளியிட்டு உள்ளது. இத்தகவல் பிப்ரவரி மாதமே வெளியாகி இருக்கிறது. மார்ச்-ஏப்ரல் மாதத்தில் இருந்தே நிர்மலா தேவி விவகாரம் பெரிதாய் வெடித்தது. ஆகையால், தமிழக ஆளுநர் செய்திருக்க வாய்ப்பிலை என பேசி இருந்தார் மாரிதாஸ். டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்டவையின் கட்டுரையில் தென்னிந்திய ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு இங்கு நடந்ததா அல்லது முன்பிருந்த இடத்தில் நிகழ்ந்ததா என்ற வார்த்தையும் இடம்பெற்று இருக்கிறது. அந்த சமயத்தில் ஊடகத்தின் பக்கத்தில், ஏற்கனவே தென்னிந்தியாவின் ஒரு ஆளுநரின் பெயரில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததாலும், நிர்மலா தேவி தொடர்பாக வெளியான ஆடியோவில் கவர்னர் என்ற வார்த்தையும் இடம்பெற்று இருந்ததாலும் தமிழக ஆளுநர் செய்திருக்கக்கூடும் என்பதற்கு முகாந்திரமாக அமைந்தது.
இப்படி முகாந்திரத்தின் அடிப்படையில் நக்கீரன் செய்தி வெளியிட்டது. இதற்காக அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் மன்னிப்பு கேட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டது. நமக்கு கிடைத்த ஆதாரங்களை வழங்கி உள்ளோம். இப்படி பொய்யான பேச்சு மற்றும் அரசியல் எதிர்ப்பிற்காக வெளியிடப்படும் வீடியோக்கள் மூலம் சுயலாபம் அடைகிறார்கள் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Links :
Governor of a southern state accused of ‘sexual misconduct’
Governor of southern state accused of sexual misconduct
Governor Of A South Indian State Faces Sexual Misconduct Allegations, Centre Begins Probe
Rape Case : 10 years Imprisonment for Ex DMK MLA Rajukumar
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை!