2017-ம் ஆண்டின் புரளிகள் டாப் 10 வரிசையில்.
2017-ம் ஆண்டின் இறுதி நாள் இன்று. இந்த வருடத்தில் பலவிதமான புரளிகள் பரவி பலவிதங்களில் சர்ச்சைகளையும், தவறான எண்ணங்களையும் நமக்கு அளித்துள்ளன. அவ்வாறு தவறாகப் பரப்பப்பட்ட வதந்திகளை நாம் கண்டறிந்துள்ளோம். இன்றைய நாளில் இவ்வருடத்தில் பரவிய புரளிகளை டாப் 10 வரிசையில் பார்ப்போம். “ ஷின் சான் ”...

2017-ம் ஆண்டின் இறுதி நாள் இன்று. இந்த வருடத்தில் பலவிதமான புரளிகள் பரவி பலவிதங்களில் சர்ச்சைகளையும், தவறான எண்ணங்களையும் நமக்கு அளித்துள்ளன. அவ்வாறு தவறாகப் பரப்பப்பட்ட வதந்திகளை நாம் கண்டறிந்துள்ளோம். இன்றைய நாளில் இவ்வருடத்தில் பரவிய புரளிகளை டாப் 10 வரிசையில் பார்ப்போம்.
“ ஷின் சான் ” கார்ட்டூன் தொடரில் வரும் ஷின் சான் என்ற குழந்தையின் கதாபாத்திரம் உண்மையான சம்பவம் ஆகும். ஐந்து வயதான ஷின் சான், தனது தங்கையான ஹிமாவாரியை மோத வந்த காரில் இருந்து காப்பாற்றும் போது விபத்தில் சிக்கி இறந்தான் என்பதை பலரும் அறிய வாய்ப்பில்லை. ஷின் சான் கார்டூன் கதாபாத்திரம் கற்பனை என்று அத்தொடரை உருவாக்கிய “ யோஷியோ உசூய் ” தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். கற்பனையான கதாபத்திரத்தை இறந்ததாகக் கூறி வதந்தியை பரப்பியுள்ளனர்.

தேர்வு என்ற பெயரில் நாம் இத்தனை ஆண்டுகளாக கஷ்டப்படுவதற்கு காரணம் இவர் தான்.“ ஹென்றி மிஷேல் ” தான் முதன் முதலில் தேர்வு எழுதும் முறையைக் கண்டுபிடித்தார் என்று மிகப்பெரிய அளவில் வைரலாகிய படம். ஆனால், படத்தில் இருப்பவர் ஹென்றி கிம்பல் ஹாட்லிக் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இசைப்பாடகன் ஆவார். மிக அருமையாக வயலின் வாசிப்பதில் கைத்தேர்ந்தவர்.

பழைய சோறு பாட்டில்களில் அடைக்கப்பட்டு 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நம் பழைய சோறு கூட இப்போது கார்ப்ரேட் கையில் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று வைரலாகிய படங்கள். கொரியா நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த “ Morning Rice Drink “ ஆல் சிலருக்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக முழுவதுமாக மாற்றம் பெற்று தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இவை இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயாவின் சிறுவயதில் எடுக்கப்பட்ட குடும்பப் புகைப்படம். ஆனால், இவை மிக நீண்ட காலமாக கலாம் அவர்களின் பெயரைக் கூறி பரவி வரும் தவறான படங்கள் ஆகும். படத்தில் இருக்கும் குடும்பம் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.
தமிழக சாரணர் இயக்கத் தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா 54 வாக்குகள் பெற்று தோல்வி. வெற்றிப் பெற்ற மணி அவர்கள் அகில பாரத இந்து மகாசபையின் முன்னால் விஸ்தாரக் அவர் என்று சமுக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்ட செய்தி. ஆனால், தமிழக சாரணர் இயக்கப் புதிய தலைவர் திரு. மணி அவர்களை தொடர்புக் கொண்டு பேசியப் போது முற்றிலும் தவறான தகவல்கள் என்று கடுமையாக மறுத்துள்ளார்.
நாசாவின் செயற்கைக்கோள் புதுச்சேரியில் அமைந்துள்ள திருநள்ளார் சனிபகவான் ஆலயத்தின் வான்பகுதியை கடக்கும் தருணத்தில் செயலிழந்து, பின் அப்பகுதியை கடந்த பிறகு மீண்டும் செயல்பட்டதாகவும், அதற்கு காரணம் ஆலயத்தின் மீது விழும் கருநீலக்கதிர்களே என்றும் செய்திகள் பரவின. ஆனால், இது தொடர்பான எந்தவொரு தகவல்களும் நாசாவின் இணையதளத்தில் இடம்பெறவில்லை. மேலும், இஸ்ரோவின் தலைவர் திரு. மயில்சாமி அண்ணாதுரை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடராஜன் மற்றும் சசிகலா ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்ட மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின். கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் நடராஜன் மற்றும் சசிகலா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது என்பது உண்மை. எனினும், இப்படமானது கலைஞருடைய உதவியாளரின் திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை அறிவித்துள்ளனர். தமிழ் மொழியை தற்போது தான் ஆஸ்திரேலியாவின் தேசிய பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அந்த கோரிக்கையை ஆஸ்திரேலியாவின் பார்லிமென்ட் உறுப்பினர் ஹீயுஜ் மெக் டெர்மட் என்பவர் கல்வி அமைச்சரிடம் எழுத்துபூர்வமாக முன் வைத்துள்ளார்.

பாண்டிச்சேரி மீனவர்கள் ஓர் அபூர்வமான மீனைக் கடலில் பிடித்துள்ளனர். பிடிபட்ட அம்மீனின் தலை மற்றும் வால் பகுதி மட்டுமே மீன் போன்று உள்ளது. ஆனால், தலைக்கும், வாலுக்கும் இடைப்பட்ட உடலமைப்பானது மனிதரின் உடல் போன்று அமைந்துள்ளது. மியான்மர் நாட்டின் இளைஞர் ஒருவர் அபூர்வமான தோற்றம் கொண்ட மீனின் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். சிலிக்கானைப் பயன்படுத்தி தத்ரூபமாக அமைத்ததோடு, அதனுள் இயந்திர மோட்டார்களையும் பொருத்தியுள்ளார்.

குழந்தைகளை முடமாக்கிய போலியோ நோயை முழுவதுமாக ஒழித்த நாடு இந்தியா என உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு. தூய்மை இந்தியா கனவு நாயகன் மோடி அவர்களுக்கு நன்றி. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு 26 மே 2014-ம் தேதி ஆட்சிக்கு வந்தது . ஆனால், அதற்கு முன்பாகவே போலியோ நோயானது படிப்படியாகக் குறைக்கப்பட்டு மார்ச் 2014-ல் இந்தியாவில் போலியோ முழுவதும் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.